வெறியாட்டம் போடும் இஸ்ரேல்.. மருத்துவமனை மீது குண்டு வீச்சு.. 500 அப்பாவிகள் பரிதாப மரணம்!

Su.tha Arivalagan
Oct 18, 2023,07:25 AM IST

காஸா: காஸாவில் உள்ள அஹில் அராப் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய மனிதாபிமானமற்ற குண்டு வீச்சுத் தாக்குதலில் நோயாளிகள் உள்ளிட்ட 500 அப்பாவி பொதுமக்கள் அநியாயமாக உயிரிழந்துள்ளனர்.


இஸ்ரேல் கட்டுப்பாடில்லாமல் நடத்தி வரும் வெறித்தனமான தாக்குதலில் தொடர்ந்து அப்பாவிகள் அதிக அளவில் உயிரிழந்து வருவது அனைவரையும் அதிர வைத்துள்ளது. உலகம் முழுவதும் கண்டனம் அதிகரித்தும் கூட இஸ்ரேல் கொஞ்சம் கூட இறங்கி வருவதாக தெரியவில்லை. மனிதாபிமானமற்ற முறையிலான தாக்குதலை அது தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.


ஆனால் இந்தத் தாக்குதலுக்கு தாங்கள் காரணம் இல்லை என்றும் ஹமாஸ் ஏவிய ராக்கெட்தான் தவறுதலாக அஹில் அராப் மருத்துவமனை மீது விழுந்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதை காஸா சுகதாரத் துறை இதை மறுத்து, இஸ்ரேல் ராணுவம்தான் இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது.




அஹில் அராப் மருத்துவமனை மீது விழுந்து ராக்கெட் தாக்குதலில் சிக்கி அப்பாவி நோயாளிகள், அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள், டாக்டர்கள், நர்ஸ்கள் என அப்பாவிகள் அநியாயமாக பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் இந்த சம்பவத்தைக் கடுமையாக கண்டித்துள்ளார். தாக்குதலில் அப்பாவி உயிர்கள் பலியாவது ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று அவர் கூறியுள்ளார்.


இதுகுறித்து ஜோ பிடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அல் அஹ்லி அரபு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அப்பாவி மனித உயிர்கள் பலியாகியிருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார் பிடன்.


ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டாரஸும் இதைக் கண்டித்துள்ளார். சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் மருத்துவமனைகள், மருத்துவப் பணியாளர்கள் பாதுகாக்கப்பட்டவர்கள். அப்படி இருக்கும் நிலையில் அவர்கள் மீதான இந்தத் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது என்றார் அவர்.



ஏற்கனவே வடக்கு காஸாவிலிருந்து கிட்டத்தட்ட லட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனர். அந்த நகரை வான்வெளித் தாக்குதல் மூலம் முற்றிலும் நிர்மூலமாக்கி விட்டது இஸ்ரேல். இந்த நிலையில் தனது தரைவழித் தாக்குதலையும் அது தீவிரப்படுத்த ஆயத்தமாகி வருகிறது. அது நடந்தால் மிகப் பெரிய அளவில் காஸாவுக்கு அழிவு ஏற்படும் என்று ஐ.நா. அச்சம் தெரிவித்துள்ளது. ஆனால் காதில் போட்டுக் கொள்வதாகவே இல்லை இஸ்ரேல்.


உலக நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு வலுக்கிறது


இதற்கிடையே, பல்வேறு நாடுகளிலும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அமெரிக்காவின் பல நாடுகளில் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.


உலக அளவில் இஸ்ரேலின் மிருகத்தனமான தாக்குதலுக்கு எதிர்ப்பு வலுத்து வருவதால், இஸ்ரேலை அமைதிப்படுத்தி அதன் வேகத்தைத் தணிக்கும் முயற்சிகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது. அதிபர் ஜோ பிடன் நேரடியாக இஸ்ரேலுக்கே வரவுள்ளார். அப்போது இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் அப்பாவிகள் பலியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை அவர் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.