தாத்தா ஆனார் ரோபோ சங்கர்.. மகள் இந்திரஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.. தாயும், சேயும் நலம்!
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் தாத்தா ஆகியுள்ளார். அவரது மகள் இந்திரஜாவுக்கு இன்று மாலை அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் ரோபோ சங்கர். சாதாரண மிமிக்ரி கலைஞராக மதுரை நகரத்து மேடைகளை அலங்கரித்து வந்தவர் ரோபோ சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, ரோபோ சங்கரின் திறமைக்கு சரியான களம் அமைத்துக் கொடுத்தது. அங்கு ஆரம்பித்தது அவரது கலையுலகப் பயணம். இந்தப் பயணம் இன்று தமிழ்த் திரையுலகிலும் அவருக்கு நல்ல இடம் அமைத்துக் கொடுத்து உயர்த்தியுள்ளது.
ரோபோ சங்கர் காதல் மணம் புரிந்தவர். அவரது மனைவி பெயர் பிரியங்கா. அவர் ஒரு நடனக் கலைஞர் ஆவார். இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் மூத்தவர்தான் இந்திரஜா. தந்தை வழியில் காமெடியிலும் தாய் வழியில் நடனத்திலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் இந்திரஜா. அவருக்கு கடந்த ஆண்டு முறை மாமனான கார்த்திக்குடன் திருமணம் ஆனது. அதைத் தொடர்ந்து கர்ப்பம் தரித்தார் இந்திரஜா.
இந்த நிலையில் இன்று மாலை இந்திரஜாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திரஜா தாயாகியிருப்பது ரோபோ சங்கர் குடும்பத்தினரையும், கார்த்திக் குடும்பத்தினரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. தாத்தா ஆகியுள்ள ரோபோ சங்கருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்