ஆத்தாடி இது என்ன சாலையா? கடலா?. கதிகலங்கி போன சென்னை மக்கள்

Meenakshi
Dec 04, 2023,05:42 PM IST

சென்னை: புயல் மற்றும் கன மழை காரணமாக இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சாலைகள் கடல் போல் காட்சியளிக்கின்றன.  சாலை எது என்று கூட தெரியாத நிலையில் சென்னையில் உள்ள சாலைகள் அனைத்திலும் தண்ணீர் சூழ்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது.


தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நேற்று  புயல் உருவானதை தொடர்ந்து இன்று காலை  சென்னை சுற்றுப் பகுதிகளில்  கனமழை பெய்து வருகிறது. சென்னை அடையாரை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமான மழை பெய்து வருவதால் அடையாறில் இருந்து பெசன்ட் நகர் செல்லும் எம் ஜி ரோடு பிரதான சாலை முழுவதுமாக 3 அடிக்கு (இடுப்பிற்கு ) மேல் தண்ணீர் தேங்கி உள்ளதால் ஒரு  இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. 





சென்னை கோயம்பேட்டில் இருந்து வடபழனி செல்லும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே சாலைகள் தூண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர். கனமழையால் சாலைகளில் நீர் தேங்கி பேருந்துகள் முதல் அனைத்து வகையான வாகனங்களும் தண்ணீரில் சிக்கி தவிக்கின்றன. ஆங்காங்கே சாலைகளில்  மரங்கள் சாய்ந்து கிடப்பதாலும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கம், இந்திரா நகர், கொளத்தூர், கேகே நகர், மடிப்பாக்கம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சாலைகளில் தண்ணீர் நிரம்பு இருப்பதனால், வாகன ஓட்டிகள் மேடு, பள்ளம், குழி எது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். அவசர தேவைகளுக்கு  கூட வெளியில் செல்லமுடியாத நிலையில் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.  


தற்பொழுது புயல் கிழக்கு வடகிழக்கு திசையில் சென்னைக்கு அருகே 110 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. புயல் சென்னையின் வடக்கே நகர்ந்தாலும் இன்று இரவு வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் மொபைல் போன் டவரும் கட்டாயியுள்ளது. இதன் காரணமாக தகவல் தொடர்பும் கட்டாகி சென்னை தனி தீவு போல காணப்படுகிறது.