IPL2024.. மீண்டும் வருகிறார் ரிஷப் பந்த்.. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக!

Su.tha Arivalagan
Dec 12, 2023,06:37 PM IST

டெல்லி: சாலைவிபத்தில் காயமடைந்து குணமடைந்து ஓய்வில் இருந்து வரும் ரிஷப் பந்த் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக அவர் செயல்படவுள்ளார். 


2016ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானார் பந்த். அதன் பிறகு 98 போட்டிகளில் அவர் ஆடியுள்ளார். 2838 ரன்களையும் எடுத்துள்ளார். இவரது ஸ்டிரைக் ரேட் 147.97 ஆக உள்ளது. தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ரிஷப் பந்த் அடுத்த ஆண்டு தொடரில் கேப்டனாக செயல்படவுள்ளார். 


ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே அவர் விளையாடும் தகுதியை அடைந்து விடுவார் என்ற நம்பிக்கையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி உள்ளது. சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். அங்கு தீவிர பயிற்சியிலும் கலந்து கொண்டார். ரிக்கி பான்டிங், சவுரவ் கங்குலி, பிரவீன் அம்ரே ஆகியோர் அந்த பயிற்சி முகாமின்போது ரிஷப் பந்த்தின் ஆட்டத் திறனை கண்காணித்தனர். அவருக்கு பல அறிவுரைகளையும் கொடுத்தனர்.




சாலை விபத்தில் சிக்கிய பிறகு சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்து வருகிறார் பந்த். ஆக்டிவான கிரிக்கெட் போட்டிகளில் இன்னும் அவர் பங்கேற்கவில்லை. அவர் பல மாதங்களாகவே கிரிக்கெட் விளையாடாமலும் இருந்து வருகிறார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மூலமாக அவர் மீண்டும் தொழில்முறை கிரிக்கெட்டுக்குத் திரும்பவுள்ளார்.


கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பந்த் ஆட முடியவில்லை. அதேபோல உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, உலகக் கோப்பைக் கிரிக்கெட் ஆகியவற்றையும் அவர் மிஸ் செய்து விட்டார். ஆனால் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர்பான விளம்பரங்களில் பந்த்தான் டாப்பில் இருந்தார் என்பது முக்கியமானது.