சென்னை, கொல்கத்தாவுக்கு ஆபத்து.. கடல் மட்டம் உயர்ந்தால் நகரங்கள் மூழ்கும்!

Su.tha Arivalagan
Mar 05, 2023,05:22 PM IST

டெல்லி: இந்தியப் பெருங்கடலின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்தால், சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


உலகம் முழுவதும் greenhouse gases உமிழ்வு காரணமாக பூமியின் வெப்ப நிலை உயர்ந்து வருகிறது. இதனால் பனிப் பிரதேசங்கள் கடும் பாதிப்பை சந்திக்கின்றன. கால நிலை மாற்றம் ஏற்பட்டு பல்வஏறு தட்பவெப்ப மாற்றங்களை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. பனிமலைகள் உருகுவதால்  ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது அதிகரிக்கிறது. கடல் நீர் மட்டமும் உயர்கிறது. 


உலகம் முழுவதும் கடல் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் பல முக்கிய கடலோர நகரங்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். பல நகரங்கள், தீவுகள் மூழ்கும் அபாயமும் அதிகரிக்கிறது.


இந்த நிலையில் சென்னை, கொல்கத்தா, யாங்கோன்,  பாங்காக், ஹோசி மின் சிட்டி, மணிலா ஆகிய நகரங்கள் 2100ம் ஆண்டுவாக்கில் மூழ்கும் அபாயம் உள்ளதாக புதிதாக வெளியாகியுள்ள ஒரு ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கால நிலை மாற்றம் காரணமாக இந்த நகரங்களுக்கு ஆபத்து அதிகரித்து வருவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதுதொடர்பான ஆய்வறிக்கை ஒன்று Nature Climate Change என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


உலக அளவில் பல்வேறு கடல்களின் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. அவற்றின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதாக ஏற்கனவே விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இந்த நிலை காரணமாக மேற்கு பசிபிக் தீவுகள் பலவும் மூழ்கும் அபாயம் உள்ளதாம். அதேபோல மேற்கு இந்தியப் பெருங்கடல் நகரங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாம்.


வட கிழக்கு அமெரிக்காவின் கடலோர நகரங்களும் கூட கடல் நீர் மட்டம் உயர்வால் மூழ்கும் அபாயத்தை சந்தித்துள்ளன.  பசுமை இல்ல  வாயுக்கள் உமிழ்வு உலகம் முழுவதும் குறைந்தபாடில்லை. தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுதான் பூமியின் வெப்பம் அதிகரிக்க முக்கியக் காரணம். இதைக் குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பல்வேறு கடலோர நகரங்கள் மூழ்கும் அபாயத்தைத் தடுக்க முடியாது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


சென்னைக்கு ஆபத்துன்னு சொல்றாங்க.. பேசாமல் "சென்னைக்கு மிக மிக அருகே" .. விழுப்புரத்தில் வீடு வாங்கிக் குடியேறி விடலாம் போலயே!