தக்காளி போயி அரிசி வந்தது டும் டும் டும்.. கன்னத்தில் கை வைத்த இல்லத்தரசிகள்.. விலை கிடு கிடு!

Meenakshi
Feb 22, 2024,07:25 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அரிசி விலை மீண்டும் கிடுகிடுவென  உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விலை ஏற்றம் பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது.


பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்களின் விலை ஏற்றம் பொதுமக்களை கவலை அடையச் செய்துள்ளது. விலை ஏற்றம் ஒரு பக்கம் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. மற்றொருபுறம் வேலை வாய்ப்புகளும் குறைந்து வருகிறது. இதனால்,  பொதுமக்கள் செய்வது அறியாமல் திகைத்து உள்ளனர். 




இந்நிலையில், அரிசி விலையும் உயர்ந்துள்ளது மேலும் பொதுமக்களை கவலை அடையச் செய்துள்ளது. கர்நாடக மற்றும் ஆந்திராவில் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் அரிசி விலை உயர்ந்து வருகிறது.கடந்த நான்கு மாதங்களில் படிப்படியாக இட்லி அரிசி கிலோ ஒன்றுக்கு 10 ரூபாயும் சாப்பாட்டு அரிசி கிலோ ஒன்றுக்கு 12 ரூபாய் முதல் 14 வரை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பல  மாவட்டங்களில்  கடந்த நான்கு மாதங்களில் 25 கிலோ கொண்ட ஒரு சிப்பம் அரிசி விலை 300ல் இருந்து 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.


வெளி மாநிலங்களில் அரிசியின் விளைச்சல் குறைந்துள்ளதால் ஒருபுறம் விலை அதிகரித்து வரும் நிலையில், மிச்சாம் புயல் காரணமாக தமிழகத்திலும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்விரு காரணங்களினால் அரிசி விலை உயர்ந்தது. அந்த விலை மீண்டும் தற்போது கிடுகிடு என உயர்ந்து வருகிறது.


வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால் தமிழகத்தில் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அரிசி விலை ஒரு கிலோவுக்கு பத்து ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




இந்த விலை ஏற்றம், சாமானிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை மிகுந்த கவலை கொள்ளச் செய்துள்ளது.இந்த விலை ஏற்றத்தை  கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள்  கூறியுள்ளனர்.டெல்டா மாவட்டங்களிலும் விளைச்சல் குறைந்ததால் அரிசி விலை அதிகரித்ததாக வணிகர்கள் கூறி வருகின்றனர். இந்த ஆண்டு முழுவதும் விலை குறைய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.


சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை கடுமையாக உயர்ந்து மக்களை அதிர வைத்தது.. தக்காளி கெட்ட கேட்டுக்கு இந்த விலையா என்று பலரும் கடுப்பாகினர். பின்னர் அது மட்டுப்பட்டு நாா்மல் ஆனது. இப்போது அரிசியின் டர்ன் போல.. அது எப்ப குறையப் போகுதோ!