குடியரசு தின அலங்கார ஊர்தி.. தமிழ்நாட்டின் குடவோலை முறை ரதத்துக்கு 3வது பரிசு!

Meenakshi
Jan 31, 2024,12:53 PM IST

புதுடில்லி: குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.


டெல்லியில் கடந்த 26ம் தேதி குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகள் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு, நடைபெறுவது வழக்கம். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, மணிப்பூர், உத்திர பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்கள் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறை மற்றும் துணை ராணுவப் படைகளின் அலங்கார ஊர்திகளும் இடம் பெற்றன. மொத்தம் 25 வகையான ஊர்திகள் இந்த விழாவில் இடம் பெற்றன. 




சிறப்பான ஊர்திகளை இரு  பிரிவுகளின் கீழ் தேர்வு செய்து பரிசு வழங்குவது வழக்கம். ஒன்று நடுவர் குழுவினர் இறுதி செய்வார்கள். இரண்டாவது மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் சிறந்த ஊர்திகள் தேர்வு செய்யப்படும். இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழா அணி வகுப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன.  அதில் பங்கேற்ற தமிழ்நாடு அரசின் ஊர்தி குடவோலையின் சிறப்பை விளக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், பெண்களின் பறை இசையோடு கலந்து சென்ற இந்த ஊர்தி குடியரசுத் தலைவர், பிரதமர்  உள்ளிட்ட பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 


இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் குடவோலை ஊர்திக்கு நடுவர்களின் குழு மூன்றாவது பரிசை அறிவித்துள்ளனர். குடிசைத்தொழில் பெண்கள் முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஒடிசாவின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசும்,  எல்லை பகுதி சுற்றுலாவை பிரதிபலிக்கும் குஜராத்தின் அலங்கார ஊர்திக்கு இரண்டாவது பரிசும்  அறிவிக்கப்பட்டிருந்தது. 


மக்கள் தேர்வில் அடிப்படையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் குஜராத்திற்கு முதலிடமும் உத்தரப்பிரதேசத்திற்கு இரண்டாவது இடமும், ஆந்திராவிற்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளன.