ஜெய்ப்பூர் கோட்டைகளைச் சுற்றிப் பார்க்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்.. பிரதமர் மோடியுடன் இணைந்து!

Su.tha Arivalagan
Jan 25, 2024,10:31 AM IST

டெல்லி: குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இன்று ஜெய்ப்பூர் வருகிறார். அவரும், பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து ஜெய்ப்பூரின் புகழ் பெற்ற கோட்டைகளை சுற்றிப் பார்க்கவுள்ளனர். இருவரும் இணைந்து ரோட்ஷோ ஒன்றையும் நடத்தவுள்ளனர்.


புகழ் பெற்ற அமீர் கோட்டைக்கு பிரதமர் மோடியும், அதிபர் மேக்ரானும் செல்லவுள்ளனர். அங்கு கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதுதவிர யுனெஸ்கோவால் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜந்தர் மந்தருக்கும் இரு தலைவர்களும் செல்லவுள்ளனர். அதன் பிறகு ஜந்தர் மந்தரிலிருந்து சங்கநேரி கேட் வரை ரோட்ஷோவில் இருவரும் பங்கேற்கின்றனர். ஹவா மஹால் அருகே மக்களையும் சந்திக்கவுள்ளனர்.




ஹவா மஹாலில் ஜெய்ப்பூரின் மிகப் பிரபலமான ஸ்பெஷல் மசாலா சாய் சாப்பிடவுள்ளனர். அங்கு கைவினைப் பொருட்களையும் பார்வையிட்டு மேக்ரான் வாங்கவுள்ளார். இதற்காக அந்த இடத்தில் கைவினைப் பொருட்களின் விற்பனை கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. யுபிஐ மூலம் இதற்கான பணத்தை மேக்ரான் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று இரவு ராம்பாக் அரண்மனையில் அதிபர் மேக்ரானுக்கு தனியார் மூலம் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


குடியரசு தின விழா நிகழ்ச்சிக்குப் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் தனியாக சந்திக்கவுள்ளனர். அரசு முறையிலான அந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகள், வர்த்தகங்கள் உள்ளிட்டவை குறித்து

முக்கியமாக விவாதிக்கப்படும். குறிப்பாக கூடுதலாக 26 ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான பேச்சும் நடைபெறவுள்ளது.


இந்தியாவுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகளில் 2வது பெரிய நாடு பிரான்ஸ் ஆகும். மேலும் பல வருடமாக நாம் பிரான்சிடமிருந்து ஆயுதங்களை வாங்கி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.


பிரான்ஸ் நாட்டுக்கு குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் அழைப்பு கடைசி நிமிடத்தில்தான் விடுக்கப்பட்டது. இருந்தாலும் அதிபர் மேக்ரான் உடனடியாக இதை ஏற்றுக் கொண்டார். இந்தியா, பிரான்ஸ் இடையே வலுவான உறவு உள்ளதை இதை நிரூபிப்பதாக அமைந்துள்ளது. முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்குத்தான் சிறப்பு விருந்தினராக வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவரால் வர முடியாது என்று கூறப்பட்டதால் கடைசி நேரத்தில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அழைக்கப்பட்டுள்ளார்.