"ஹோட்டலுக்குள்" காலெடுத்து வைக்கும் முகேஷ் அம்பானி!

Aadmika
Aug 26, 2023,10:48 AM IST

மும்பை : முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஓட்டல் பிசினசிலும் அடியெடுத்து வைக்க உள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல இங்கிலாந்திலும் இந்த பிசினசை விரிவாக செய்ய உள்ளதாம்.


உலகம் பணக்காரர்கள் பட்டியலில் முக்கிய இடத்தை பல ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி, தற்போது தனது தொழில் சாம்ராஜ்யத்தை மேலும் விரிவுபடுத்த போகிறார். டெக்னாலஜி, தொலைப்தொடர்பு உள்ளிட்ட பல தொழில்களை ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது. தற்போது பிரபல ஓட்டல் துறை நிறுவனமான ஒபராய் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா மற்றும் இங்கிலாந்தில் 3 ஓட்டல்களை நடத்த திட்டமிட்டுள்ளது. 




மும்பையின் பந்த்ரா குர்லா காம்ளக்சில் உள்ள ஆனந்த் விலாஸ் ஓட்டல், இங்கிலாந்தில் ஸ்டோக் பார்க் ஆகிய ஓட்டல்களை ரிலையன்ஸ் துவங்க உள்ளது. இது தவிர குஜராத்திலும் இரண்டு பிரம்மாண்ட ஓட்டல்களை திறக்க உள்ளதாம். ரிலையன்ஸ் திறக்க உள்ள ஓட்டல்களில் விளையாட்டு வசதிகள், கோல்ஃப் கோர்ஸ், உள்ளிட்ட பல வசதிகள் இருக்குமாம். உலக தரத்திலான வசதிகளை வழங்குவதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒபராய் நிறுவனம் துணையாக இருந்து வருகிறதாம்.


ஏற்கனவே இந்தியாவில் பெரும்பாலான துறைகளில் தடம் பதித்து விட்ட ரிலையன்ஸ் தற்போது ஓட்டல் பிசினசிலும் இறங்க உள்ளதால் உலக அளவில் பல முன்னணி நிறுவனங்களுக்கு கடும் தொழில் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.