டெல்லி முதல்வராக ரேகா குப்தா தேர்வு.. முதல் முறை எம்.எல்.ஏ.. டெல்லியின் 4வது பெண் முதல்வராகிறார்!
டெல்லி: டெல்லி மாநில முதல்வராக ரேகா குப்தா நாளை பதவியேற்கவுள்ளார். டெல்லியின் நான்காவது பெண் முதல்வர் என்ற பெருமைக்குரியவராகிறார் ரேகா குப்தா.
ரேகா குப்தா, டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரேகா குப்தாவை பாஜக எம்.எல்.ஏக்கள் கூடி புதன்கிழமை மாலை முதல்வராக தேர்ந்தெடுத்தனர். இதன் மூலம் இரண்டு வார காத்திருப்பு முடிவுக்கு வந்தது.
பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸின் ஷீலா தீக்ஷித் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி ஆகியோர் டெல்லியின் முதல்வர்களாக இருந்த பிற பெண் தலைவர்கள் ஆவர். இதில் அதிஷி மட்டுமே குறுகிய காலம் முதல்வர் பதவியில் இருந்தவர்.
50 வயதான ரேகா குப்தா, ஷாலிமார் பகில் இருந்து முதல் முறையாக எம்எல்ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாளை பிற்பகல் 12 மணிக்கு டெல்லி, ராம்லிலா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்டமான பதவியேற்பு விழாவில் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்கிறார்.
பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தலைநகரத்தில் ஆட்சிக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி மாநிலத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமையும் பாஜக ஆட்சி இது என்பதால் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளுக்கு பாஜக திட்டமிட்டுள்ளது. அதை நடைமுறைப்படுத்தும் மிகப் பெரிய பொறுப்பு ரேகா குப்தாவுக்கு உள்ளது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
ரேகா குப்தா மாணவர் சங்கத் தலைவராக இருந்தவர் என்பதால் இளம் தலைமுறையினருடன் எளிதாக கனெக்ட் ஆக முடியும் என்று பாஜக தலைமை நம்புகிறது. ரேகா குப்தா தனது ஆட்சியில் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கத் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அவரது ஆட்சிக்கு சவால்கள் இல்லாமல் இல்லை. ரேகா குப்தா அரசியலில் அனுபவம் பெற்றவராக இருந்தாலும், நிர்வாகத்தில் அந்த அனுபவம் இல்லாதவராகவே இருக்கிறார். இருப்பினும் மூத்த தலைவர்களின் வழிகாட்டுதல் மற்றும் பல்வேறு திட்டமிடல்கள் மூலம் நிர்வாகத்தை அவர் திறம்பட நடத்துவார என பாஜக தலைமை நம்புகிறது.
டெல்லியின் மிக முக்கியத் தேவையாக இருப்பது, பொருளாதார வளர்ச்சியும் வேலைவாய்ப்புதான். டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக இருந்தவர் என்பதால், இளம் பட்டதாரிகளுக்கு நிலையான வேலைவாய்ப்புகள் தேவை என்பதை அவர் அறிந்துள்ளார். வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரிக்கவும், தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான திறனுக்கான பயிற்சித் திட்டங்களை உருவாக்கவும் குப்தா முயற்சிப்பார் என்று நம்பலாம்.
சுஷ்மா சுவராஜுக்குப் பிறகு, ரேகா குப்தா, பாஜக சார்பில் டெல்லி முதல்வராகவும் 2வது தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நியமனம் மூலம் டெல்லி முதல்வராக ஒரே கட்சியிலிருந்து 2வது முறையாக முதல்வரான பெண் என்ற பெயரும் அவருக்குக் கிடைத்துள்ளது. நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவல் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.