கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.. மீண்டும் விண்ணப்பிக்கலாம்.. இன்று முதல்

Su.tha Arivalagan
Sep 18, 2023,10:27 AM IST

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத்  திட்டத்தில் விடுபட்டவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பங்கள் கொடுத்து வருகின்றனர்.


தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள மிகப் பெரிய திட்டம் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம். இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்படும். இந்தத் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.


செப்டம்பர் 15ம் தேதி இந்தத் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். அதற்கு முதல் நாளிலிருந்தே பயனாளிகளுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போதைக்கு 1.06 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




இருப்பினும் பலருக்கும் உதவித் தொகை வரவில்லை என்ற புகார் கிளம்பியுள்ளது.  மேலும் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டும் உள்ளன. இந்த நிலையில் இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில் அவர்கள் இன்று முதல் இசேவா மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.  இன்று விண்ணப்பிப்போருக்கு அடுத்த 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்கப்படும்.