டிப்டாப்பாக போக வேண்டியது.. "சுட" வேண்டியது .. சிக்கிய "ரீல்ஸ் ராணி" அனீஷ் குமாரி!

Su.tha Arivalagan
Mar 27, 2023,10:09 AM IST


சென்னை: டிப்டாப்பாக போய் வீடுகளில் நகை உள்ளிட்டவற்றை திருடி வந்த "ரீல்ஸ் ராணி" அனீஷ்குமாரியை போலீஸார் கைது செய்துள்ளனர்.


சென்னை மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த ரீல்ஸ் ராணி அனீஷ் குமாரி, சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகை திருடி சிக்கியுள்ள கதை கிரைம் வட்டாரத்தில் பரபரப்பையும், கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


33 வயதான அனீஷ் குமாரி, டிக்டாக்கில் ரீல்ஸ் செய்து வந்தவர். இப்போது இன்ஸ்டாகிராமுக்கு போய் விட்டார். குண்டக்க மண்டக்க ரீல்ஸ் செய்து வெளியிட்டு அதை வைத்து ஏதோ செய்து வந்துள்ளார். ஆனால் அவருக்குள் ஒரு கிரைம் ராணியும் மறைந்திருந்திருக்கிறார். அந்த கிரைம் ராணிதான் இப்போது இந்த ரீல்ஸ் ராணியை போலீஸிடம் மாட்டி விட்டு விட்டார்.


சமீபத்தில் பெருங்களத்தூரைச் சேர்ந்த சபாபதி என்பவரின் வீட்டிலிருந்து மூன்று பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனது. இதுகுறித்து சபாபதி போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆராய்ந்தபோது ஒரு ஸ்கூட்டியில் இளம் பெண் ஒருவர் வந்து சென்றது தெரிய வந்தது.  இதையடுத்து கிட்டத்தட்ட 40 சிசிடிவி காட்சிகளை பின் தொடர்ந்து ஆராய்ந்ததில் அந்த டூவிலர் மண்ணிவாக்கத்தில் போய் நின்றது தெரிய வந்தது. அந்த டூவீலர் நின்ற வீட்டுக்கு போலீஸார் விரைந்து சென்றனர்.


அப்போது ஒரு பெண் வீட்டு வளாகத்தில் நின்று ரீல்ஸ் செய்து கொண்டிருந்தார். அந்தப் பெண் அணிந்திருந்த டி சர்ட்டும், சிசிடிவி காட்சியில் வந்த பெண் அணிந்திருந்த டி சர்ட்டும் ஒன்றே என்பதை பார்த்ததுமே கண்டுபிடித்து விட்டனர் போலீஸார். இதையடுத்து இவர்தான் அவர் என்பதையும் உறுதி செய்து கொண்டு அந்தப் பெண்ணிடம் விசாரித்தனர்.


முதலில் அவர் முரண்டு பிடித்துள்ளார். நான் டிக்டாக் பிரபலம், ரீல்ஸ் மூலம் எனக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எனக்கு ஏதாவது என்றால் ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். ஆனால் கையில் இருந்த வீடியோ ஆதாரத்தைத்தூக்கி நீட்டிய போலீஸார், இப்போ ஸ்டேஷனுக்குப் போலாமா என்று கூறி  அவரைக் கைது செய்வதாக கூறினர்.


இதையடுத்து பயந்து போன அனீஷ் குமாரி, நகை தன் வீட்டில்தான் இருப்பதாக கூறி வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அங்கு ஃபிரிட்ஜில் நகையைப் பதுக்கி வைத்திருந்தார். அதை எடுத்து போலீஸாரிடம் கொடுத்தார். அதன் பின்னர் அவரை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். நகையுடன் ரூ. 10,000 பணத்தையும் திருடியுள்ளார் அனீஷ் குமாரி. அந்தப் பணத்தை அப்போதே செலவு செய்து விட்டாராம்.


ரீல்ஸ் செய்து லைக்குகளை எண்ணி வந்த அனீஷ் குமாரி,, இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.. அவரைக் காணாமல் அவரோட ரசிகர்கள்தான் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ, பாவம்!