திருவள்ளூருக்கு "ரெட்".. சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கன மழை தொடரும் - வானிலை மையம்

Meenakshi
Dec 04, 2023,05:42 PM IST

சென்னை:  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் திருவள்ளூருக்கு மட்டும் தற்போது ரெட் அலர்ட்டை வானிலை மையம் அறிவித்துள்ளது.


இருப்பினும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள மிச்சாங் புயல் தொடர்ந்து கன மழையை அள்ளிக் கொட்டிக் கொண்டுள்ளது. நேற்று மாலையில் இருந்து இந்த நிமிடம் வரை கன மழை கொட்டி வருகிறது. புயலால், சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கன மழை பெய்து சென்னையை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டது.




இந்த பேய் மழையால் நேற்று மாலையில் இருந்து சென்னை வாசிகள் தவித்து வருந்தனர். தொடர் கனமழையால் சென்னை முழுவதும் தண்ணீரில் மிதந்து வருவதுடன், பொது மக்களின் இயல்பு நிலையும் ஸ்தம்பித்தது.  மிச்சாங் புயல் தீவிர புயலாக நாளை வலுப்பெறும் நிலையில் சென்னையில், சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து என அனைத்தும் ஸ்தம்பித்துள்ளது. பொதுமக்கள் முக்கிய தேவைகளுக்கு கூட வெளியில் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மொத்த நகரிலும் மின்சார சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. 


பல இடங்களில் தொலைபேசி, இணையதள சேவையும் விட்டு விட்டு வருகிறது. ஒரே நாள் மழையில் மொத்த சென்னையும் தனித் தீவாகிக் கிடக்கிறது. பல இடங்களில் மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளது. பேரிடர் மீட்பு குழுவினர்களும், அரசும் தங்களால் முடிந்த வரை மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். தமிழக அரசுத் துறைகள், திமுகவினர், அதிமுகவினர் என அனைவரும் களத்தில் இறங்கியுள்ளனர்.


இதற்கிடையே, திருவள்ளூர் மாவட்டத்துக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் நீங்கியுள்ளதால் சென்னை உள்ளிட்ட 3 மாவட்ட மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். ஆனாலும் கன மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இன்று  இரவுக்கு மேல்தான் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை குறைந்து மக்களுக்கு நிம்மதி ஏற்பட வாய்ப்புள்ளது.