"நியாயமான முறையில் மட்டுமே வட்டி வசூலிக்க வேண்டும்" .. வங்கிகளுக்கு செக் வைத்த ஆர்பிஐ

Meenakshi
Apr 30, 2024,04:09 PM IST

டெல்லி: வங்கிகளும், நிதி நிறுவனங்களும் நியாயமான முறையில் மட்டுமே வட்டி வசூலிக்க வேண்டும் என இந்திய ரிசவ் வங்கி தெரிவித்துள்ளது.


பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்காக கடன் வாங்குகின்றனர்.இந்நிலையை அறிந்து கொண்ட வங்கிகள் தாறுமாறாக வட்டியை வசூலித்து வருகின்றனர். அது குறித்து காரணம் கேட்டாலும் அவற்றிற்கு சரியான பதில்களையும் தெரிவிப்பதில்லை. எவ்வளவு வட்டி, எவ்வளவு பிடித்தம் என்று கூறினாலும் அதில் ஒவ்வொரு மாதமும் மாற்றம் நிகழ்ந்து கொண்டே வருவதும், அதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருவதும் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருந்து வருகிறது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஆர்பிஐ சில விதிகளை விதித்து இருந்தாலும் பெரும்பாலான வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அவற்றை மீறியே செயல்படுகின்றன. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது கடனாளிகள் தான்.




ஒரு வீட்டிற்காக கடன் வாங்கி விட்டு பின்னர் அந்த கடனை அடைப்பதற்கு வாழ்நாள் முழுவதும் செலவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அதிகபடியான வட்டி வசூலிப்பதே ஆகும். இது தொடர்பாக தொடர்ந்து வந்த புகார்களை அடுத்து இந்த அறிவிப்பை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆர்பிஐ  வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2003 ஆம் ஆண்டு முதலே வங்கிகள், நிதி நிறுவனங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை ஆர்பிஐ வெளியிட்டு வருகிறது. அதன்படி வட்டி வசூலிப்பதில் நேர்மையும், வெளிப்படை தன்மையும் இருப்பது மிகவும் அவசியம்.


கடந்த மார்ச் 31 2023 ஆம் ஆண்டுடன் நிறைவடைந்த நிதியாண்டு காலகட்டத்தை ஆய்வு செய்ததில், சில வங்கிகள், நிதி நிறுவனங்களில் வட்டி வசூல் மற்றும் கட்டணங்களை வசூலிப்பது நியாயமற்ற செயல்பாடுகளில்  ஈடுபட்டது தெரியவந்துள்ளது. முக்கியமாக, கடன் பெற்றவரின் கடன் தொகை செலுத்தப்பட்ட நாளிலிருந்து வட்டியை கணக்கிடாமல், கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட நாளிலிருந்து வட்டி வசூலிப்பது, கடன் நிலுவையில் உள்ள நாட்களுக்கு மட்டும்  வட்டி வசூலிக்காமல், அந்த மாதம் முழுவதும் கணக்கீட்டு வட்டி வசூலிப்பது உள்ளிட்டவை நிகழ்ந்துள்ளன.


ஒரு கடன் தவணையை முன்னதாகவே பிடித்துக் கொண்டு, கடன் தொகை முழுவதற்கும் வட்டி கணக்கிடுவது போன்ற செயல்களிலும் சில நிதி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இது மிகவும் கவலைக்குரிய நிகழ்வுகளாகும். இது போன்ற புகார்கள் வரும்போது, கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கில் திரும்பச் செலுத்த ஆர்பிஐ உத்தரவிடுவது வழக்கமாகும். எனவே, நியாயம் அற்ற முறையில் செயல்பட்ட வங்கிகளும், நிதி நிறுவனங்கள் கூடுதலாக வசூலித்த தொகையை வாடிக்கையாளர் கணக்கில் திரும்பச் செலுத்தி விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.