"இந்த வேர்ல்ட் கப்பை மட்டும் வெல்லாவிட்டால்".. ரவி சாஸ்திரி என்ன இப்படிச் சொல்லிட்டாரு!

Su.tha Arivalagan
Nov 13, 2023,05:22 PM IST

டெல்லி: இந்தியா இந்த முறை உலகக் கோப்பையை வெல்லத் தவறினால், அடுத்த 3 உலகக் கோப்பைத் தொடர்களுக்குப் பிறகுதான் நம்மால் அதை வெல்ல முடியும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.


நடப்பு உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி எந்தவிதமான தடுமாற்றமும் இல்லாமல் அதிரடியாக ஆடி வருகிறது. பெரிய அணியாக இருந்தாலும் சரி, சிறிய அணியாக இருந்தாலும் சரி, எந்தவித சிரமத்தையும் அது சந்திக்காமல் திறம்பட ஆடி வருகிறது.


இந்திய அணியின் பேட்ஸ்மேன்களும் சரி, பவுலர்களும் சரி சிறப்பாக விளையாடி வருகின்றனர். பீல்டிங்கிலும் இந்தியா பிரமாதப்படுத்திக் கொண்டுள்ளது. நேற்று நெதர்லாந்து அணியை லெப்ட் ஹேன்டில் இந்தியா டீல் செய்த விதம் ரசிகர்களை டபுல் சந்தோஷமாக தீபாவளியைக் கொண்டாட வைத்து விட்டது.




இந்த நிலையில் இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்லும், வெல்ல வேண்டும். அப்படி வெல்ல முடியாமல் போனால் அடுத்து 3 உலகக் கோப்பைத் தொடர்களுக்கு நாம் கோப்பைக்காக காத்திருக்க நேரிடும் என்று ரவி சாஸ்திரி எச்சரித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் கொடுத்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:


இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலரும் இப்போது தங்களது கெரியரின் உச்சத்தில் உள்ளனர். எனவே இந்த முறை இந்தியா கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.


12 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வெல்லும் வாய்ப்பை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இதனால் இந்தியர்கள் மிகவும் உற்சாகத்துடன் காத்திருக்கிறார்கள். மீண்டும் இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பு சிறப்பாக உள்ளது. சிறப்பாக இந்தியா விளையாடுவதால் இது சாத்தியமாகியுள்ளது.


ஆனால் இந்த முறை இந்தியா கோப்பையை வெல்லத் தவறினால் அடுத்த 3 உலகக் கோப்பைத் தொடர்களுக்கு அவர்கள் காத்திருக்க நேரிடும். காரணம் இப்போதைய இந்திய அணியின் 7 முதல் 8 வீரர்கள் தங்களது கெரியரின் நிறைவுத் தருவாயில் உள்ளனர். இது அவர்களுக்கு கடைசி உலகக் கோப்பைத் தொடராகக் கூட இருக்கக் கூடும்.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களுடன் இந்தியா வலுவாக திகழ்கிறது. ஜஸ்ப்ரீத் பும்ரா, முகம்மது ஷமி, முகம்மது சிராஜ் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். அதேபோல ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் சிறப்பான முறையில் ஸ்பின் பவுலிங்கைச் செய்து வருகின்றனர். இது அசாதாரணமான சூழல். இதுவரை இப்படி ஒருங்கிணைந்த தாக்குதலை இந்தியா செய்ததில்லை.


இந்தப் பந்து வீச்சாளர்கள் தொடர்ச்சியாக பந்து வீசி வருகின்றனர். சூழல்களை சிறப்பாக அறிந்து வைத்துள்ளனர். ஷார்ட் பால்களை நிறையப் போடுவதன் மூலம் அதன் லாபத்தை அழகாக அறுவடை செய்கின்றனர். ஷார்ட் பாலை   ஒரு ஆயுதமாக அவர்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் முக்கியமாக ஸ்டம்ப்புகளைக் குறி வைத்து அவர்கள் பந்து வீசுவது குறிப்பிடத்தக்கது என்றார் ரவி சாஸ்திரி.