அதிகரிக்கும் முறைகேடுகள்.. ரேஷன் கடைகளின் நேரத்தை மாற்ற.. அரசு அதிரடி முடிவு.. விரைவில் அறிவிப்பு!

Manjula Devi
May 23, 2024,03:43 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் காலை மாலை என இரு வேலைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்று வரும் நிலையில், இதற்கு இடைப்பட்ட மதிய வேளைகளில் கூடுதலாக உள்ள இடைவெளி நேரத்தை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாம்.


இப்படிச் செய்வதன் மூலம் ரேஷன் பொருட்களை கடையிலிருந்து வெளியே கடத்துவது தடுக்கப்படும் என்று அரசு கருதுகிறது. இ தன் காரணமாகவே ரேஷன் கடையில் நேரம் மாற்றம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று உணவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




தமிழ்நாடு முழுவதும்  மொத்தம் 4.99 லட்சம் ரேஷன் கடைகள் உள்ளன. மத்திய அரசின் மானியத்துடன் இங்கு குறைந்த விலையில்  மக்களுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, கோதுமை, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள்  வழங்கப்படுகின்றன. இங்கு வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் அரசின் மானியத்தில் குறைந்த விலையில் வழங்குவதால் ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்தப் பொருட்களை வாங்குவதற்கு ரேஷன் கார்டு கட்டாயமாகும். தற்போது ரேஷன் கார்டு ஸ்மார்ட் கார்டாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.


தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படுகின்றன.


சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் காலை மாலை என இரண்டு வேளைகளில் கடைகளை மூடி திறப்பதற்கு இடையே இரண்டரை மணி நேரம் உணவு இடைவேளை விடப்படுகிறது. இந்த நேரத்தில் அட்டைதாரர்கள் வாங்காத பொருட்களை கடத்துதல் உள்ளிட்ட முறைகேடுகள் அரங்கேறி வருகிறது. இந்த முறைகேடுகளில் சில ஊழியர்கள் ஈடுபடுவதாக உணவுத்துறை அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர். இதைத் தடுப்பது தொடர்பாக, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசித்தனர். அப்போது இடைவேளை நேரம் அதிகமாக இருப்பதே முறைகேடுகள் நடக்கக் காரணம். எனவே அதைக் குறைத்தால் சரியாக இருக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது.


அதன்படி ரேஷன் கடைகளில் மதிய வேளைகளில் விடப்படும் நேரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். விரைவில் அதிகாரப்பூர்வ நேரம் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.