Ratha Saptami: ரதசப்தமி அன்று எருக்க இலை குளியல் ஏன்? எதற்காக ?

Swarnalakshmi
Feb 04, 2025,07:09 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


ரத சப்தமி இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில் எருக்க இலை குளியல் அவசியம் என்பார்கள். அப்படி செய்தால், பாவங்கள் நீங்கும் புனிதத் தன்மை பெருகும் என்பார்கள். அது என்ன எருக்க இலை குளியல்.. எப்படி அதைச் செய்ய வேண்டும். அதைப் பற்றிப் பார்ப்போம்.


தை மாத வளர்பிறை சப்தமி நாளே ரதசப்தமி என்று அழைக்கிறோம். நாம் நேரில் காணும் தெய்வம் சூரிய பகவான். சூரியனின் பிறந்த நாளான ரதசப்தமி நாளை சூரிய ஜெயந்தி என்று அழைப்பர்.


இந்த உலகம் செழிக்க சூரிய பகவானே காரணமாகிறார் அவர் தனது ரதத்தில் ஏழு குதிரைகள் பூட்டப்பட்டு ஓய்வு இல்லாமல் வலம் வருகிறார்.




தை மாதம் முதல் தேதி அன்று தெற்கு திசையில் பயணித்துக் கொண்டிருந்த சூரிய பகவான் அடுத்து பயணிக்க வட திசையை பார்க்கிறார் .இதிலிருந்து உத்திராயண புண்ணிய காலம் தொடங்குகிறது. ஆனால் ,ரதசப்தமி அன்றுதான் சூரிய பகவான் தனது தேரை வடக்கு நோக்கி திருப்புகிறார் .தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்ராயண புண்ணிய காலம் .இந்த ஆறு மாதங்களே தேவலோகத்தில் ஒரு நாளின் பகல் பொழுது. இந்த காலத்தில் உயிர் துறப்பவர் நற்கதி அடைகிறார் என்பது ஐதீகம்.


மகாபாரத போர்க்களத்தில் பீஷ்மர் வீழ்த்தப்பட்டு அம்புப் படுக்கையில் படுத்து இருக்கிறார் .தான் விரும்பும் தருணம் உயிர் பிரியும் என்ற வரம் பெற்றவர் பீஷ்மர் .அவர் உத்ராயன புண்ணிய காலத்தில் உயிர் துறக்க விரும்பினார் .ஆனால், உயிர் பிரியவில்லை. அங்கு வந்த வியாசரிடம் இதன் காரணம் என்ன? என்று வினவினார்.


வியாசர் கூறியதாவது: பீஷ்மா ,ஒருவன் தன் மனம், மொழி ,மெய் ஆகியவற்றால் யாருக்கும் அநீதி செய்யாவிட்டாலும் முன்பு அரசவையில் திரௌபதியின் துகிலை உரித்தான் துச்சாதனன், அப்போது கண்முன்னே அநீதி நடந்தும் ,அதனை நீ தடுக்கவில்லை .அந்தப் பாவத்தினால் உயிரை விட இயலாமல் அம்பு படுக்கையில் தவிக்கிறீர்கள் என்றார்.


நல்லது எது? கெட்டது எது? என்று யோசிக்காத உன் அங்கங்கள் தண்டனை பெற வேண்டும் என்பதே விதி என்றார் வியாசர். உடனே பீஷ்மர் ,"வியாசரே! என் அங்கங்களை சுட்டிருக்கும் வகையில் சூரிய சக்தியை பிழிந்து தாருங்கள் "என்று வேண்டினார். பிறகு வியாசர் அவர் கொண்டு வந்த எருக்க இலைகளை எடுத்து பீஷ்மா எருக்க  இலைகள் சூரியனுக்கு உகந்தது இதனை அர்க்க பத்ரம் என்று கூறுவர் .அர்க்கம் என்றால் சூரியன் ,பத்ரம் என்றால் இலை. சூரியனின் முழு சக்தியும் எருக்க இலைகளில் உள்ளது.


எனவே எருக்க இலைகளை வைத்து, "உன் அங்கங்களை அலங்கரிக்க போகிறேன், அவை உன் பாவங்களை நீக்கி புனித படுத்தும் "என்றார் வியாசர் அவ்வாறே செய்தார் எருக்க இலைகள் பீஷ்மரின் பாவங்களை போக்கியது. பீஷ்மரைப் போல அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ரதசப்தமி அன்று எருக்கன் இலைகளை வைத்து குளிக்கும் முன் மூன்று இலைகளை தலையிலும், நான்கு இலைகளை தலா இரு தோள்களிலும் வைத்து குளிப்பார்கள்.


தலையில் வைக்கும் நிலையில் சிறிது மஞ்சள் பொடியும் அட்சதையும் வைத்து குளிக்க பாவங்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெருகும். இவ்வாறு ஆண்கள், பெண்கள் ,குழந்தைகள் செய்வதால் செல்வ வளம் பெருகும். சூரிய வழிபாடு ஆதி காலம் முதல் நடைமுறையில் உள்ளது. ரதசப்தமி அன்று தானங்கள் செய்வதற்கு உகந்த நாள். இந்நாள் செய்யும் தர்மங்கள் 100 மடங்கு புண்ணியங்களை சேர்க்கும் என்கிறது சாஸ்திரம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்