நான் நல்லாருக்கேன்.. செக்கப்புக்காகவே மருத்துவமனையில் அனுமதி.. வதந்திகளை நம்பாதீர்கள்.. ரத்தன் டாடா

Su.tha Arivalagan
Oct 07, 2024,01:30 PM IST

மும்பை:   தான் நலமாக இருப்பதாகவும், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் இந்தியாவின் முது பெரும் தொழிலதிபர் ரத்தன் டாடா கூறியுள்ளார்.


இந்தியாவின் மூத்த தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா உடல் நலக்குறைவு காரணமாக மும்பை ப்ரீச்கண்டி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனால் அனைவரும் கவலை அடைந்தனர். மேலும் அவர் குறித்த செய்திகளும் வேகமாக பரவின.




இதையடுத்து ரத்தன் டாடா பெயரில் ஒரு விளக்கம் வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது உடல் நிலை குறித்து பல்வேறு வகையான வதந்திகள் பரவுவது குறித்து அறிந்தேன். அவை அனைத்தும் தவறு என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.  தற்போது எனது வயோதிகம் மறறும் அதுதொடர்பான உபாதைகள் காரணமான வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. நல்ல உடல் ஆரோக்கியத்துடன், மன வலிமையுடன் இருக்கிறேன்.


எனவே பொதுமக்களும், மீடியாக்களும் எனது உடல் நிலை குறித்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ரத்தன் டாடா.


ரத்தன் டாடாவே விளக்கம் அளித்து விட்டதால் அவரது நலம் விரும்பிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் அவர் வீடு திரும்பவும் பிரார்த்திப்பதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்