ராமரை மட்டுமல்ல.. சீதா தேவியையும் அவமதித்தவர்கள்.. அயோத்தி மக்கள் மீது பாயும் ராமாயண நடிகர்!

Su.tha Arivalagan
Jun 06, 2024,04:10 PM IST

டெல்லி: அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்ததை அந்தக் கட்சியினரால் ஜீரணிக்கவே முடியவில்லை. பலரும் உ.பி. வாக்காளர்களை குற்றம்சாட்டி பேசி வருகின்றனர். அந்த வரிசையில் ராமாயணம் டிவி தொடரில் லட்சுமணர் வேடத்தில் நடித்த சுனில் லஹிரி, உ.பி. வாக்காளர்களை குற்றம் சாட்டிப் பேசியுள்ளார்.


பாஜகவினரின் மிகப் பெரிய நம்பிக்கையாக இருந்தது அயோத்தி ராமர் கோவில்தான். பாபர் மசூதி இடிக்கப்பட்டது முதலே தொடங்கியது பாஜகவின் வளர்ச்சி. அன்றிலிருந்துதான் உ.பியில் அவர்களது வளர்ச்சி தொடங்கி படிப்படியாக நாடு முழுக்க பரவியது. ராமருக்கு கோவில் கட்டுவதை மிகப் பெரிய சாதனையாகவும் பாஜக கருதியது. இதனால்தான் ராமர் கோவில் திறப்பை மிகப் பெரிய விழா போல நாடு முழுவதும் பாஜகவினர் முன்னெடுத்தனர்.




ஆனால் ஒட்டுமொத்த பாஜகவினரையும் அதிர வைத்து விட்டது லோக்சபா தேர்தல். உ.பியில் கனவிலும் கூட நினைக்க முடியாத தோல்வியை பாஜக சந்தித்துள்ளது. அதைக் கூட ஒரு வகையில் சமாதானப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் எதை மிகப் பெரிதாக நினைத்தார்களோ, அந்த ராமர் கோவில் அமைந்திருக்கும் அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் லோக்சபா தொகுதியிலேயே பாஜக தோல்வி அடைந்ததுதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


ராமரே பாஜகவை தோற்கடித்து விட்டார் என்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் கிண்டலடித்துக் கொண்டுள்ளனர். பாஜகவினரோ, உ.பி. வாக்காளர்களை குற்றம் சாட்டிப் பேசி வருகிறார்கள். நடிகர் சுனில் லஹிரி ஒரு வீடியோ போட்டு பேசியுள்ளார். அதில் அவர், தேர்தல் முடிவைப் பார்த்து நான் பெருத்த ஏமாற்றமடைந்தேன். முதலில் மிகக் குறைந்த வாக்குகளே பதிவாகின. இப்போத இந்த முடிவு அதிருப்தியையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது. அதிக அளவில் வாக்களியுங்கள் என்று நான் தொடர்ந்து மக்களுக்குக் கோரிக்கை வைத்து வந்தேன். ஆனால் அவர்கள் அதைப் பொருட்படுத்தவே இல்லை. இப்போது கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் இந்த அரசு எத்தனை காலம் நிலைக்கப் போகிறது என்ற கேள்வி எழுகிறது. அதுதான் கவலை தருகிறது.


அயோத்தி மக்கள் துரோகிகள் :




அயோத்தி மக்கள் எப்போதுமே தங்களது மன்னருக்கு துரோகம் இழைத்தவர்கள்தான். சீதா தேவி வனவாசம் முடிந்து நாடு திரும்பியபோது அவரையே கேள்வி கேட்டவர்கள்தான் அயோத்தி மக்கள். அவர்கள் முன்பு கடவுளே வந்து நின்றாலும் கூட அவரை ஏற்காமல் நிராகரிக்கவே செய்வார்கள். இப்போதுதான் அதுதான் நடந்துள்ளது. 


நீங்கள் சீதா தேவியைக் கூட விடாதவர்கள். அப்படிப்பட்ட நீங்கள் ராமரை மட்டும் எப்படி விட்டு வைப்பீர்கள். குடிசையில் கிடந்த ராமரை கோவிலுக்கு கொண்டு வந்தவர்களை நிராகரித்து விட்டீர்களே. உங்களை இந்தியா ஒரு போதும் மன்னிக்காது, இரக்கம் காட்டாது என்று கூறியுள்ளார் சுனில் லஹிரி. அயோத்தி மக்களை கடுமையாக விமர்சித்து இவர் பேசியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதேசமயம், தனது சீரியல் அண்ணன் அருண் கோவில் (இவர்தான் ராமராக நடித்தவர்) மற்றும் நடிகை கங்கனா ரனாவத் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது குறித்து சுனில் லஹிரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ராமாயணம் சீரியலில் ராமராக நடித்த அருண் கோவில் மீரட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பி ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.