ராமர் கோவில் கும்பாபிஷேகம்.. ஜனவரி 22ம் தேதி.. ராஜஸ்தானில்.. இறைச்சி விற்க தடை!

Meenakshi
Jan 20, 2024,01:58 PM IST

ஜெய்ப்பூர்: அயோத்தியில் நாளை மறுநாள் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஜனவரி 22ம் தேதி இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் முக்கிய நிகழ்வாக தற்போது அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் ஏகப்பட்ட செயல்பாடுகள் களை கட்டியுள்ளன.  ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகைளை பிரப்பித்து வருகின்றன. பல முன்னேற்பாடுகளும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 


பல ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்தப்பட்டு வந்த அயோத்தி ராமர் கோவில் பிரச்சனைக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி முற்றுப்புள்ளி வைத்தது. அதன் பின்னர் மத்திய அரசு அனுமதியுடன் ராமர் கோவில் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது ஜனவரி 22ம் தேதி மிகப் பிரம்மாண்ட அளவில் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. பால ராமர் சிலை அங்கு நிறுவப்படவுள்ளது.




இந்த திறப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், முன்னணி நட்சத்திரங்கள் என பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். முக்கிய பிரமுகர்கள் வருகையையொட்டி அயோத்தி முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 


ராமர் கோவில் திறப்பையொட்டி மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை, 9000 ரயில் நிலையங்களில் திறப்பு விழா நேரடி காட்சிகள், மதுக்கடைகளுக்கு விடுமுறை என மத்திய மற்றும் பாஜக - கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் அறிவி்த்துள்ளன. 


அந்த வகையில் சமீபத்தில் ராஜஸ்தானில் ஆட்சியமைத்த பாஜக அரசு, தற்போது அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள இறைச்சி கடைகளை ஜனவரி 22ம் தேதி திறக்க  தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் இறைச்சிக் கடைகள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.