தங்கை என் தங்கை.. உடையாத அன்பை பறைசாற்றும் ரக்ஷா பந்தன்.. பிரியங்காவுக்கு.. ராகுல் காந்தி வாழ்த்து

Manjula Devi
Aug 19, 2024,03:07 PM IST

டெல்லி:   சகோதரி பிரியங்கா காந்தியுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உடையாத அன்பை பறைசாற்றும் பண்டிகை ரக்ஷா பந்தன் என தன் சகோதரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.


ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வரும் பௌர்ணமி அன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தமது சகோதரர்களுக்கு கையின் மணிக்கட்டில் மஞ்சள் கயிறு கட்டுவது இப்பண்டிகையின் சிறப்பாகும். இக்கயிறை ராக்கி என அழைப்பர். இந்த ராக்கி கயிறு கட்டியவுடனேயே பெண்களுக்கு தன் சகோதரர்கள் பணம் அல்லது பரிசு வழங்குவது வழக்கம். 




ஒவ்வொரு வருடமும் வட மாநிலங்களில் இப்பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது தமிழர்களும் இப்பண்டிகையை இந்து பண்டிகையாக கருதாமல் சமுதாயப் பண்டிகைகளாக எண்ணி கொண்டாடி வருகின்றனர். இன்று அதாவது ஆகஸ்ட் 19ஆம் தேதி பெண்கள் சகோதரர்களுக்கு கயிறு கட்டும் தினமான ரக்ஷா பந்தன் தினம்  நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 


இந்த ரக்ஷாபந்தன் தினத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்  ரக்‌ஷா பந்தன் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன்,தங்கைக்கு இடையிலான உடைக்க முடியாத அன்பையும் பாசத்தையும் பறைசாற்றும் ஒரு பண்டிகை ரக்ஷா பந்தன். பாதுகாப்புக் கயிறு, எப்போதும் உங்கள் புனிதமான உறவை வலுப்படுத்தட்டும் என பதிவிட்டு தனது  சகோதரியான பிரியங்கா காந்தியுடன் இருக்கும் புகைப்படத்தை  பகிர்ந்துள்ளார்.


அதே போல பிரியங்கா காந்தி ராகுல் காந்திக்கு ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான உறவு ஒரு பூச்செடி போன்றது. அதில் வெவ்வேறு வண்ணங்களின் நினைவுகள், ஒற்றுமையின் கதைகள் மற்றும் நட்பை ஆழமாக்குவதற்கான மரியாதை ஆகியவை அன்பு மற்றும் பரஸ்பர புரிதலின் அடித்தளத்தில் செழித்து வளரும் என பதிவிட்டுள்ளார்.


இதேபோல பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு சிறுமிகள் சேர்ந்து ராக்கி கட்டி மகிழ்ந்தனர். அதேபோல முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் பிரம்மகுமாரிகள் இயக்க சகோதரிகள் ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்