அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் ரஜினிகாந்த்...விஐபி.,க்கள் லிஸ்ட் ரெடி

Aadmika
Dec 19, 2023,09:13 PM IST

அயோத்தி : அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் பிரன பிரதிஷ்டை எனப்படும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாகவும், இதற்காக அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா மற்றும் கோவில் திறப்பு விழா ஜனவரி 22ம் தேதி நடக்க உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க ஜீயர்கள், புரோகிதர்கள், மத தலைவர்கள் மட்டுமல்ல, நாட்டின் பல துறைகளை சேர்ந்த விஐபி.,க்களையும் அழைக்க ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர டிரஸ்ட் முடிவு செய்துள்ளது. முன்னாள், அந்நாள் நிர்வாக அதிகாரிகள், பத்திரிக்காயளர்கள் பலரும் கூட இந்த விழாவில் அழைக்கப்பட உள்ளனர்.


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அயோத்தி ராமர் கோவில் டிரெஸ்ட் செயலாளர் சம்பத் ராய், கோவில் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க உள்ள விருந்தினர்கள் பட்டியல் மிக கவனமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள், நடிகர்கள், ராணுவ அதிகாரிகள், பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருது பெற்றவர்கள் உள்ளிட்ட பலரும் அழைக்கப்பட்டுள்ளனர். 




விருந்தினர்கள் பட்டியலில் திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமா, பாபா ராம்தேவ், தொழிலதிபர்களில் அதானி குழுமத்தை சேர்ந்த கெளதம் அதானி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி, டாடா குழுமத்தின் நடராஜன் சந்திரசேகரன், என் அன் டி குழுமத்தில் எஸ்.என்.சுப்ரமணியன், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மாதுரி தீட்ஷித் மற்றும் ராமானந்த் சாகர் உள்ளிட்ட பலர் அழைக்கப்பட்டுள்ளனர்.


இவர்கள் தவிர பல்வேறு மதங்களை சேர்ந்த 400 சன்னியாசிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆந்திரா, திரிபுரா, மிசோரம், சிக்கிம், அந்தமான், ஜார்கண்ட் என பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். 125 மத தலைவர்கள்,  சங்கராச்சாரியார், பாபா ராம்தேவ், அமிர்தானந்தமயி உள்ளிட்ட பலரும் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலரும் இதற்காக அழைக்கப்பட்டுள்ளனர். 


கோவில் கட்டுமான பணியில் பணியாற்றிய தொழிலாளர்களில் 10 முதல் 15 சதவீதம் பேரும் இவ்விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 22 ம் தேதி பகல் 12 மணிக்கு இவ்விழா நடைபெறும். சிலை பிரதிஷ்டைக்கு பிறகு பூஜைகள் உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து 48 நாட்கள் வரை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.


வட மாநிலங்களை வலம் வரும் ரஜினிகாந்த்


சமீபத்தில் ஜெயிலர் படம் ரிலீசானதும் திடீரென இமயமலைக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், திரும்பி வரும் வழியில் உத்திர பிரதேசத்திற்கு சென்று அம்மாநில முதல்வர் யோகிஆதியநாத்தை சந்தித்து, அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் இடத்திற்கும் சென்று பார்த்தார். அப்போது பேட்டி அளித்த அவர், இந்த கோவில் பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. நேரில் வந்து பார்த்தால் தான் தெரியும். அனைவரும் ஒருமுறையாவது நேரில் வந்து பார்க்க வேண்டிய இடம் என்றார். 


கடந்த சில நாட்களுக்கு முன் தான் தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் துவங்கி உள்ளது. இதற்கு வேட்டையன் என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். ஜெய்பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் எழுதி, இயக்கும் வேட்டையன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் 2024 ம் ஆண்டு ரிலீசாக உள்ளது.