அக்டோபர் 10ம் தேதி .. என்ன நாள் தெரியுமா.. வேட்டையன் தியேட்டர்களுக்கு வரப் போகும் நாள்!

Su.tha Arivalagan
Aug 19, 2024,06:20 PM IST

சென்னை:   சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி திரையிடப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள  படம் வேட்டையன். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. ரஜினிகாந்த்துடன், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் நேரடி தமிழ்ப் படம் இதுவாகும்.


இப்படம் குறித்த அறிவிப்பு 2023 மார்ச் மாதம் வெளியானது. தலைவர் 170 என்று தொடங்கி பின்னர் டிசம்பர் 2023ல் படத்தின் தலைப்பு வெளியானது. படத் தலைப்பு படு ஸ்டைலாக அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் குஷியானார்கள். திருவனந்தபுரம், சென்னை, ஹைதராபாத், மும்பை, திருநெல்வேலி என பல்வேறு ஊர்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அனிருத் இசையமைக்க, படத்தை டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய ஜெய் பீம் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது என்பதாலும், ரஜினியுடன் இணைந்திருப்பதாலும் வேட்டையன் மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.




தீபாவளி மற்றும் தசரா பண்டிகையையொட்டி அக்டோபர் 10ம் தேதி இப்படம் திரையிடப்படவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் ரஜினி ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.


தமிழ்நாட்டில் இப்படத்தை ரெட்ஜெயன்ட் நிறுவனம் திரையிடவுள்ளது. ஜெயிலர் படம் ரஜினி ரசிகர்களை மிகப் பெரிய அளவில் திருப்திப்படுத்தியது என்பதாலும் கமர்ஷியலாக அது வெற்றி பெற்றது என்பதாலும், வேட்டையன் படமும் அந்த சாதனையை முறியடித்து வசூல் சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில் ரஜினி ரசிகர்கள் உள்ளனர்.


கங்குவா தேதி மாறுமா.. இல்லை வேட்டையனுடன் மோதுமா?


சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள கங்குவா படமும் அக்டோபர் 10ம் தேதிதான் வெளியாகும் என ஏற்கனே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை ரஜினிகாந்த் படமும்- சூர்யா படமும் நேருக்கு நேர் மோதியதில்லை.  மேலும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நான் எப்போதும் ரஜினி படங்களுடன் மோத மாட்டேன் என்றும் முன்பே கூறியுள்ளார்.


இதனால் கங்குவா படம் திட்டமிட்டபடி வெளியாகுமா அல்லது முன்கூட்டியே வெளியாகுமா அல்லது வேட்டையனுக்குப் பிறகு வெளியாகுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. சூர்யா ரசிகர்கள் கங்குவாவுக்காக வெறித்தனமாக காத்துள்ளனர். எனவே படத் தேதியை மாற்றினால் அவர்கள் அப்செட் ஆவார்கள் என்பதால் கங்குவா டீம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


அப்படி இல்லாவிட்டால் வருவது வரட்டும் வந்தா மலை.. வராட்டி "அண்ணாமலை" என்று தைரியமாக வேட்டையனுடன் கங்குவா மோதுமா என்ற எதிர்பாப்பும் எழுந்துள்ள்ளது. ஒரு வேளை இரு படங்களும் மோதினால், இரு படங்களுமே பிரமாண்ட வெற்றி பெற்றால் அது தமிழ் சினிமா உலகில் மிகப் பெரிய வசூல் சூறாவளியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்