அக்டோபர் 10ம் தேதி.. வேட்டையன் தியேட்டருக்கு வருது... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தகவல்!

Su.tha Arivalagan
Jun 03, 2024,01:16 PM IST

- இந்துமதி


சென்னை: அக்டோபர் 10ம் தேதி தான் நடித்து வரும் வேட்டையன் படம் திரைக்கு வருவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தே தெரிவித்துள்ளார்.


ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் மிகப் பெரிய ஹிட்டடித்தது. அதைத் தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தமான படம்தான் வேட்டையன். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் ஏகப்பட்ட ஸ்டார்கள் நடித்துள்ளனர்.


அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் என லிஸ்ட் பெரிதாகவே இருக்கிறது. ஜெய் பீம் படத்தை இயக்கியவர் ஞானவேல் என்பதால் இந்தப் படம் குறித்து மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஜெய் பீம் படத்தைப் போலவே இதிலும் ஆழமான சமூகக் கருத்து இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பெரிய பெரிய ஸ்டார்கள் நடித்திருப்பதால் அதுவும் எதிர்பார்ப்பை பலமாக கிளப்பியுள்ளது.




இந்த நிலையில் இப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என்று ரஜினியே தகவல் தெரிவித்துள்ளார். வேட்டையன் ஷூட்டிங் முடிந்து விட்ட நிலையில் தனது இமயமலைப் பயணத்தை ரஜினிகாந்த் மேற்கொண்டுள்ளார். அந்தப் பயணத்தின்போதுதான் வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.


வேட்டையன் படத்தை முடித்து விட்ட ரஜினிகாந்த், இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு இந்த வாரம் தமிழ்நாடு திரும்புகிறார். அதன் பின்னர் அவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள கூலி படத்தில் நடிக்கப் போகிறார். இந்தப் படமும் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.