"ராமரைப் பார்க்க வருஷா வருஷம் வருவேன்".. ரஜினிகாந்த் உற்சாகம்.. இமயமலை டிரிப்பில் இனி அயோத்தியும்?

Su.tha Arivalagan
Jan 22, 2024,06:13 PM IST

லக்னோ: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொண்டது குறித்து நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். வருடா வருடம் இங்கு வரப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.


அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் இன்று திறக்கப்பட்டது. அங்கு பால ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி முன்னின்று பூஜைகளைச் செய்தார்.


இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைத் தவிர நாட்டின் மற்ற பிரபலங்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். தொழிலதிபர்கள், நடிகர் நடிகையர், துறவிகள் உள்ளிட்ட பல்துறைப் பிரமுகர்கள் வந்திருந்தனர்.




ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த், பேரப் பிள்ளைகள் உள்ளிட்டோருடன் வந்து கலந்து கொண்டார்.  நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேட்டபோது, ரொம்ப நன்றாக இருந்தது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி இது. நான் மிகவும் அதிர்ஷ்டக்காறன். அயோத்திக்கு வருடா வருடம் வருவேன் என்றார் மகிழ்ச்சியாக.


ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகும் இமயமலைக்குப் போவது வழக்கம். ஜெயிலர் படம் முடிந்த பிறகும் கூட அதையே அவர் செய்தார். அப்படியே வட மாநிலங்களிலும் டூர் அடித்து விட்டு வந்தார்.  இப்போது அவரது டூர் பட்டியலில் அயோத்தியும் இணைந்துள்ளது. ஒரு வேளை இமயமலை டூரை கட் செய்து விட்டு இனிமேல் அயோத்திக்கு அவர் அடிக்கடி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது, இமயமலை டூருடன் அயோத்தியைும் இணைத்து வட மாநில ஆன்மீகப் பயணமாக அவர் செல்லவும் வாய்ப்புகள் உள்ளன.


ஆக மொத்தத்தில் அயோத்தி, இந்தியப் பிரபலங்களின் புதிய விசிட்டிங் ஸ்பாட்டாக மாறும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.