ஜெயிலர் ஃபர்ஸ்டே ஃபர்ஸ்ட் ஷோ.. உச்சக்கட்ட கடுப்பில் ரஜினி ரசிகர்கள்

Aadmika
Aug 02, 2023,12:14 PM IST
சென்னை : ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்டே ஃபர்ஸ்ஷோ பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவல் ரஜினி ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது ரஜினியின் ஜெயிலர் படம். நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள இந்த படம் ஆகஸ்ட் 10 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் ப்ரொமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 



பொதுவாக டாப் ஹீரோக்களின் படங்களின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ அதிகாலை 2 முதல் 5 மணிக்குள் திரையிடப்படும். ஆனால் தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய கொள்கைகளின் படி தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் துவங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஆனால் பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் முதல் காட்சி காலை 6 மணிக்கே துவங்கி விடும்.

அமெரிக்காவிலும் இதே போல் முன்கூட்டியே முதல் காட்சி திரையிடப்பட்டு விடும். அப்படி பார்த்தால் வெளி மாநிலத்திலும், வெளி நாடுகளிலும் உள்ள ரசிகர்கள் தான் தலைவர் படத்தை முதலில் பார்க்க போகிறார்கள். காலை 9 மணிக்கு பிறகே தமிழக ரசிகர்கள் பார்க்க முடியும். அதாவது மற்ற மாநிலங்களில் முதல் காட்சி முடிந்த பிறகு தான் இங்கு படமே ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த தகவலால் ரஜினி ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். சோஷியல் மீடியாக்களில் தங்களின் மன குமுறல்களை கொட்டி தீர்த்து வருகின்றனர். 

ஜெயிலர் படம் ரிலீசாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே மீதமுள்ள நிலையில் இந்த படத்தை, எப்போதும் போலஅதிகாலையில் தமிழகத்திலும் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என கோடிக்கணக்கான ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.