"ஜெயிலர்" பராக்.. எங்கு பார்த்தாலும் திருவிழா மூடு.. ரசிகர்கள் எக்சைட்டட்!

Su.tha Arivalagan
Aug 09, 2023,08:52 PM IST
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் நாளை திரைக்கு வரவுள்ளதைத் தொடர்ந்து ரசிகர்கள் இப்போதே தடபுடலாக தயாராகி வருகின்றனர்.

ரஜினிகாந்த், தமன்னா நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் ஜெயிலர். இதில் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரும் கேமியோ ரோல் செய்துள்ளனர். நெல்சன் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது இப்படம்.



நாளை உலகம் முழுவதும் இந்தப் படம் திரைக்கு வருகிறது. ஜெயிலர் படத்தைப் பார்ப்பதற்காக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்துள்ளதாம். ரசிகர்களும் ஷோவை புக் செய்து விட்டுப் பார்த்து ரசிக்க காத்திருக்கிறார்கள்.

ஜெயிலர் படத்தை பிரமாண்ட வெற்றியாக்குவதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனமும் விறுவிறுப்பாக உள்ளது. கடந்த சில நாட்களாகவே ஜெயிலர் பட ஆடியோ ரிலீஸ் விழாவில் ரஜினிகாந்த் பேசிய காக்கா கழுகுக் கதையை திரும்பத் திரும்ப சன் நியூஸ் சானலில் ஒளிபரப்பி வந்தனர். 

தமிழ்நாடு முழுவதும் அதிக அளவிலான திரையரங்குகளில் ஜெயிலர் ரிலீஸாகிறது. இப்படம் ரஜினிக்கும், நெல்சனுக்கும் பலவிதங்களிலும் முக்கியமானது. நெல்சன் கடைசியாக இயக்கிய பீஸ்ட் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே ஜெயிலரின் வெற்றி நெல்சனுக்கும் முக்கியமானது. அதேபோல வசூல் ராஜா ரஜினியா இல்லை விஜய்யா என்று ஒரு டாக் ஓடிக் கொண்டிருக்கிறது. ஜெயிலர் பிரமாண்டமாக ஜெயித்தால்தான் இந்த வினாவுக்கு விடை கிடைக்கும். அந்த வகையில் ரஜினிக்கும் இது முக்கியமாகும்.