"இபிஎஸ்ஸால் ஏன் பிரதமராக முடியாது?".. ராஜேந்திர பாலாஜி பொளேர் கேள்வி!

Su.tha Arivalagan
Oct 26, 2023,05:32 PM IST

சிவகாசி: எடப்பாடியார் விரல் வீட்டுகிறவர்தான் அடுத்து பிரதமராக வர வேண்டும்.. அல்லது அவரே பிரதமராக வர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.


சிவகாசியில் நடந்த அதிமுக கூட்டத்தில்தான் இப்படிப் பேசி கலகலக்க வைத்தார் ராஜேந்திர பாலாஜி. எடப்பாடி பழனிச்சாமிக்கு தீவிரமான ஆதரவு காட்டும் தென் மாவட்டத் தலைவர்களில் ராஜேந்திர பாலாஜியும் ஒருவர். அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடியை, "மோடி எங்களுக்கு டாடி" என்றும் சொல்லி அதிர வைத்தவரும் கூட. 




இந்த நிலையில் அதிமுக - பாஜக மோதல் குறித்து பெரிதாக கருத்து கூறாமல் இருந்தார் ராஜேந்திர பாலாஜி. ஆனால் சமீபத்தில் அவர் அடுத்த பிரதமராக எடப்பாடி பழனிச்சாமி வருவார் என்று பேசியிருந்தார். இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, பலமாக சிரித்து விட்டு, இதுதான் பதில் என்று கூறி விட்டு நகர்ந்தார் அண்ணாமலை.


இந்தச் சூழ்நிலையில் நேற்று சிவகாசியில் நடந்த அதிமுக கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பேசும்போது இதற்குப் பதிலடி கொடுப்பது போல பேசினார். அவரது பேச்சிலிருந்து:


வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், எடப்பாடியார் தலைமையில், அவர் விரல் நீட்டுகிறவர் பிரதமராக வர வேண்டும். அல்லது அவரே பிரதமராக வர வேண்டும். இதைச் சொன்னதும் சில பேர் நக்கல் ஜோக் என்று சொல்கிறார்கள். 


ஒரே ஒரு எம்பியை வைத்திருந்த ஐ.கே.குஜ்ரால்  பிரதமராக வரலையா. சந்திரசேகர் பிரதமராகலையா. கர்நாடகத்தில் தேவெ கெளடா பிரதமராக வரலையா. ஒரு எம்.பி,10 எம்பிக்கள் வைத்திரவர்கள் எல்லாம் பிரதமராக வரும்போது 2 கோடி உறுப்பினர்கள் வைத்திருக்கும் மாபெரும் இயக்கமான அதிமுகவின் பொதுச் செயலாளர் ஏன் வர முடியாது. 


இந்தியாவின் 3து பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் அதிமுகவை உட்கார வைத்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அப்படிப்பட்ட இயக்கம் வீழ்ந்து விடுமா. வீழ்ந்து விடும் என்று கனவு காண்பவர்கள் பகல் கனவு காணாதீர்கள். புது எழுச்சியோடு, புது உத்வேகத்தோடு அதிமுக மீண்டும் எழுந்து வரும். 


நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி வெல்லும்.  அதேபோல சட்டசபைத் தேர்தலிலும் வெல்வோம். அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களித்து அதிமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்று பேசினார் ராஜேந்திர பாலாஜி.