சேம் சைட் கோல் போட்ட ராஜஸ்தான் அமைச்சர்.. "கெட் அவுட்" சொல்லி டிஸ்மிஸ் செய்த கெலாட்!

Su.tha Arivalagan
Jul 22, 2023,09:16 AM IST
ஜெய்ப்பூர்: மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தி கொடூரமாக நடத்தப்பட்ட சம்பவத்தை காங்கிரஸ் மிகப் பெரிய அளவில் கையில் எடுத்துள்ள நிலையில் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசை விமர்சித்துப் பேசிய அந்த மாநில அமைச்சரால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது. அந்த அமைச்சரை தற்போது முதல்வர் அசோக் கெலாட் டிஸ்மிஸ் செய்து விட்டார்.

ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் அதைப் பற்றி நாம் கவலைப்படாமல் மணிப்பூர் குறித்துப் பேசக் கூடாது என்று கூறியிருந்தார் அமைச்சர் ராஜேந்திர சிங் குதா. இதனால் காங்கிரஸ் கட்சியும், ராஜஸ்தான் மாநில அரசும் பெரும் அதிர்ச்சி அடைந்தன. பாஜகவினர் குஷியாகி விட்டனர். இந்த நிலையில்தான் குதாவை டிஸ்மிஸ் செய்து ஆளுநருக்குப் பரிந்துரைத்தார் முதல்வர் அசோக் கெலாட். ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவும் உடனடியாக பரிந்துரையை ஏற்று குதாவை டிஸ்மிஸ் செய்து விட்டார். 



அசோக் கெலாட் அமைச்சரவையில், ஹோம் கார்டு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத்துறை அமைச்சராக இருந்து வந்தார் குதா.

ராஜஸ்தான் சட்டசபையில் நேற்று வருமான உத்தரவாதச் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள், மணிப்பூர் வன்முறையைக் கண்டித்துப் பேசினர். அந்த சமயத்தில் குறுக்கிட்ட அமைச்சர் குதா, ராஜஸ்தான் அரசைக் குற்றம் சாட்டிப் பேசினார். இதனால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குதா கூறுகையில், நாம் நமது பெண்களுக்கு பாதுகாப்பு தர தவறி விட்டோம். அதுதான் உண்மை. ராஜஸ்தானில் பெண்கள் மீதான வன்முறை எந்த அளவுக���கு அதிகரித்து விட்டது என்பதை நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். முதலில் நமது மாநிலத்தைப் பற்றிக் கவலைப்படுவோம். அதைச் செய்யாமல், மணிப்பூர் குறித்துப் பேசக் கூடாது என்று அவர் கூற முதல்வர் உள்பட அனைவரும் அதிர்ச்சியாகி விட்டனர்.

குதா பேசியது பாஜகவினருக்கு குஷியைக் கொடுத்து விட்டது. பாஜக எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திர ரத்தோர் பேசுகையில், ஒரு அமைச்சரே இப்படிப் பேசுகிறார் என்றால், அது இந்த அரசே பேசுவதற்குச் சமமாகும்.  அரசாங்கமே தனது தவறை ஒத்துக் கொள்வதாக அர்த்தம். அரசின் தோல்வியை அமைச்சர் குதா அம்பலப்படுத்தி விட்டார்.  அவரை நான் பாராட்டுகிறேன். ஆனால் இது வெட்கக் கேடானது என்றார்.

அமைச்சர் குதாவின் பேச்சு ராஜஸ்தானில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக  எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக நேற்று முன்தினம் தான் கருத்து தெரிவித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பெயரையும் குறிப்பிட்டார். ராஜஸ்தான மட்டுமல்லாமல் சட்டிஸ்கர் மாநிலப் பெயரையும் கூறியிருந்தார். இரண்டு  மாநிலங்களிலும் காங்கிரஸ்தான் ஆட்சி புரிந்து வருகிறது.

மணிப்பூர் விவகாரத்தைப் பற்றிப் பேசும்போது ஏன் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை இழுத்துப் பேசுகிறார் பிரதமர் என்று எதிர்க்கட்சிகள் இதைக் கண்டித்திருந்தன என்பது நினைவிருக்கலாம்.