பழனி முருகன் கோவில் ராஜகோபுரத்தின் உச்சியில் சேதம்.. பக்தர்கள் கவலை .. சீரமைக்க கோரிக்கை

Meenakshi
Oct 01, 2024,03:06 PM IST

திண்டுக்கல்:  பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் ராஜகோபுரத்தின் உச்சிப் பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறுபடை கோவில்களில் முக்கியமானதும், தமிழ்நாட்டின் முக்கியமான கோவில்களில் பிரதானமானதும் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ஆகும். இங்குள்ள மூல முருகன் சிலை நவபாசாணத்தால், போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டுள்ளது. இது முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்து வருகின்றனர். 



வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலுக்கு தேவையான அனைத்தையும் இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது.  பொதுவாக இந்த கோவிலுக்கு விடுமுறை நாட்களில் அதிகளவிலான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், கார்த்தி்கை, கந்த சஷ்டி உள்ளிட்ட பண்டிகைகளில் கூட்டம் அலைமோதும். 

பழனி முருகன் கோவிலில் கடந்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்கு பின்னர் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் நடந்து 2 ஆண்டுகள் முடிவடைவதற்குள் கோவில் உச்சி சேதமடைந்திருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேதம் குறித்து கோவில் நிர்வாகம் கூறுகையில், பழனி கோவிலில் உள்ள குரங்குகள் கோவில் கோபுரங்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள பதுமைகளை சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், கோவில் கோபுரங்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள புதுமைகள் மற்றும் சிற்பங்கள் சேதமடைவது இயல்பானது தான்.

கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே கவலை அடைய வேண்டும். பழனி கோவில் ராஜ கோபுத்தில் சேதமடைந்த பகுதியை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும். இது குறித்து பக்தர்கள் கவலை கொள்ள வேண்டாம் என்று் தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்