"லாலால லாலால.. லாலா".. வந்தாச்சு வட கிழக்குப் பருவ மழை.. சென்னை முழுக்க "ஏசி" ஆன் பண்ணியாச்சு!

Meenakshi
Oct 21, 2023,01:00 PM IST

சென்னை: தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றே தொடங்கியது.


தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். தென்மேற்குப் பருவ மழையால் இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளில் பயன் பெறுவர். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வட கிழக்குப் பருவ மழைதான் மொத்த மாநிலத்துக்கும் பரவலாக மழையை கொடுக்கக் கூடிய காலமாகும். எனவே இந்த மழைக்காலத்தைத்தான் தமிழ்நாடு ஆர்வத்தோடு எதிர்பார்த்திருக்கும். குமரி முதல் சென்னை வரை இந்த காலத்தில்தான் அதிக மழை கிடைக்கும்.




இந்நிலையில், வடகிழக்கு பருவமழை இன்னும் 3  நாட்களில் தொடங்கவுள்ளதாக சென்னை  வானிலை மையம் முன்னர்  அறிவித்திருந்த நிலையில்  நாளை தெடங்கவிருந்த  வடகிழக்கு பருவ மழை இன்றே தொடங்கி மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


வடகிழக்குப் பருவமழை பொதுவாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் துவங்கி டிசம்பர் வரை நீடிக்கும். வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது.  வட கிழக்குப் பருவ மழை ஆரம்பத்தில் மிதமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இன்று காலை முதல் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மேகமூட்டமாக உள்ளது. சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. கன்னியாகுமரியில்  தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலையில் லேசான மழை பெய்தது. அவ்வப்போது மழை எட்டிப் பார்க்கிறது. வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது. 


இது வரை பெய்து வந்த தென் மேற்குப் பருவ மழையை காட்டிலும் தற்பொழுது தொடங்கியுள்ள வட கிழக்கு பருவ மழை அதிக மழைப் பொழிவைத் தரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் இந்த மழை பொழிவை மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகின்றனர். நவம்பர் முதல் வாரத்தில் இருந்து வடகிழக்குப் பருவ மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.