காற்று சுழற்சி நீடிக்கிறது.. தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழை தொடரும்.. வானிலை மையம்

Meenakshi
Jan 08, 2024,10:28 AM IST

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுபகுதிகளில் நேற்றில் இருந்து கனமழை பெய்து வருகிறது. நகருக்குள் அவ்வப்போது மழை ஓய்வது போல இருந்தாலும் புறநகர்களில் விடாமல் பரவலாக மழை தொடர்ந்து வருகிறது. இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 


இந்நிலையில், சென்னை, திருவள்ளுவர், ராணிப்பேட்டை, கடலூ,ர் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்றில் இருந்து லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.




அடுத்த சில மணி நேரங்களில்  சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என்று தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். நேற்று முதலே விடாமல் சென்னையில் மழை பெய்து வந்ததால் நகரமே குளிரில் நடுங்கிக் கொண்டுள்ளது.  நேற்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்ற இடத்திலும் தற்பொழுது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல ஓடியது.  இதனால் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.


புறநகர்களில் விட்டு விட்டு தொடர்ந்து பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இதுவரை நகரிலோ அல்லது புறநகர்களிலோ பெரிய அளவிலான வெள்ளப் பெருக்கு அல்லது மழைநீர் தேங்கிய பிரச்சினை ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.