பெங்களூரையும் புரட்டிப் போட்ட கன மழை.. மிதக்கும் ஐடி அலுவலகங்கள்.. 19 வரை தொடருமாம்

Manjula Devi
Oct 16, 2024,12:54 PM IST

பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று முதல் அக்டோபர் 19ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஆந்திராவில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் புதுச்சேரி கடற்கரை பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையைப் போலவே பெங்களூரிலும் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் தற்போது வரை கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. 




இதனால் முக்கிய பகுதியான அவுட்டர் ரிங் ரோடு, மான்யதா டெக் பார்க் ஆகிய பகுதிகளில் பெய்த தொடர் கன மழையால் அப்பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.


கர்நாடகா மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் பெங்களூரில், ஆனேகல் தாலுகா, நேரிகா கிராமப்பஞ்சாயத்தில் அதிகபட்ச மழைப்பொழிவாக 152.5.மி.மீ. பதிவாகியுள்ளது. மேலும் பெங்களூரு நகர்ப்புறம், உடுப்பி, துமகுரு, கோலார், ராமநகரா, பெங்களூரு கிராமம், பெலகாவி, விஜயபுரா, தட்சிண கன்னடா ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. பிற பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது.


ஆந்திராவிலும் நல்ல மழை




ஆந்திர கடலோரப் பகுதியான நெல்லூர் மாவட்டம் ஆத்மக்கூரில் 8 சென்டிமீட்டர் மழையும், கடப்பா மாவட்டத்தின் கூடூரில் 10 cm மழையும், சூலூர் பேட்டையில் 7 சென்டிமீட்டர் மழையும், திருப்பதி கூடூரில் 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை புதுச்சேரி- நெல்லுருக்கு இடையே சென்னை அருகே கரையை கடக்க உள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்குத் தென்கிழக்கு 360 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வடமேற்கு திசையில் வட தமிழகம் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் ஏற்கனவே நகர்ந்து கொண்டிருந்த நிலையில், தற்போது மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. 


இதனால் பெங்களூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய  கன முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு உள் கனடா மாவட்டங்கள் மற்றும் வட உள் கனடா மாவட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த மேற்பரப்பு காற்று வீச கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


பள்ளிகளுக்கு விடுமுறையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் வால்மீகி ஜெயந்தியை கடைப்பிடிக்கும் நோக்கில் அக்டோபர் 17ஆம் தேதி கர்நாடகா அரசு விடுமுறை அளிக்கப்படும். அந்த வரிசையில் இன்று மழை காரணமாக விடுமுறை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளையும் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடதமிழகம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி கரையை கடக்க உள்ளதால் ஆந்திரா,கர்நாடகா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ய கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்