தமிழகத்தில்.. இன்று முதல் செப்டம்பர் 8 வரை.. மழை நீடிக்கும்.. வானிலை மையம் தகவல்!

Manjula Devi
Sep 02, 2024,07:53 PM IST

சென்னை:   தமிழகத்தில் இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அதேபோல்  சென்னையில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.




வங்கக்கடலில் நீடித்து வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதே சமயம் பகலில் கடுமையான வெயிலும் நிலவி வந்தாலும் மாலை நேரங்களில் மழை பெழிந்து குளுமையான சூழல் நிலவுகிறது. இது தவிர ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மிக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.


இதனால் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்து  110 கிராமங்கள் நீரில் மூழ்கின. மக்கள் செய்வதறியாமல் கடும்  சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானாவில் இன்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  அறிவித்துள்ளது.


இதற்கிடையே மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் ஏழு நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


குறிப்பாக இன்று முதல் செப்டம்பர் எட்டாம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்