மீண்டும் வரும் மழை நாட்கள்.. தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு.. ஜில் ஜில் கூல் கூல் தான்!

Manjula Devi
Jul 25, 2024,10:22 PM IST

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கன முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்தது. மற்ற மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்து வறண்ட வானிலையே நிலவி வந்தது. இதனால் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.




இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஒரு வாரத்திற்கு மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, 


தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவையில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாம். அப்போது 7 முதல் 11 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இன்றும், நாளையும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


அதேபோல் சென்னைக்கு இரண்டு நாட்கள் மிதமான மழை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.


இதுதவிர இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, ராய்காட், தானே, ரத்தினகிரி, பால்கர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும்,கர்நாடக மாநிலத்தில் குடகு உட்பட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், கேரளாவில் வயநாடு உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.