சென்னையில்.. இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.. பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலேயே!

Manjula Devi
Sep 10, 2024,10:39 AM IST

சென்னை:   பருவமழை குறைந்ததால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அநேக இடங்களில் வறண்ட வானிலேயே நிலவும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஒடிசா அருகே கரையை கடந்தது. இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிக பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது. பெரும்பாலான பகுதிகளில்  வறண்ட வானிலை நிலவி வந்தது.




இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாடு மழை நிலவரம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, பருவமழை தற்போது குறைந்துள்ளது. இதனால் வடகடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் அடுத்த இரண்டு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும்.


குறிப்பாக சென்னையில் இன்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் நீலகிரி, வால்பாறை மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் பருவமழை குறைந்தாலும் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் இந்த மழை அச்சமூட்டும் வகையில் இருக்காது என தெரிவித்துள்ளார். 


இது தவிர கேரளாவில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தற்போது பருவமழை குறைந்ததால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு மிகப்பெரிய மழை வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்