தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 7 வரை மிதமான மழை நீடிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்

Manjula Devi
Aug 02, 2024,07:12 PM IST

சென்னை:    தமிழகத்தில் ஆகஸ்ட் 7 வரை மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தும் மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாகவும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை கொட்டு தீர்த்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி அணைக்கு வரும் அளவு அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.


இந்த நிலையில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும். இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 7 வரை மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை எதிர்பார்க்கலாம்.




சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.


அதேபோல் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் முழு கொள்ளளவை எட்டிய நிலையில்  தற்போது 1.73 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீரானது டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றிற்கு வந்து கொண்டிருப்பதால் கொள்ளிடம் ஆற்றில் இரு கரைகளையும்  தொட்டவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.


இந்த நிலையில் காவிரியில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் திருச்சி கொள்ளிடம் ஆற்றுக்குள் இருந்த இரண்டு உயரழுத்த மின் கோபுரங்கள் நீரின் வேகத்தை தாக்குப் பிடிக்காமல் சாய்ந்தது. அதில் ஒன்று நேற்று இரவு விழுந்தது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை மற்றொரு மின் கோபுரமும் விழுந்து  ஆற்றுக்குள் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு நிலவியது. இதனால் கொள்ளிடம் பாலத்தில்  போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து ஆறு மணி நேரமாக இதனை சரி செய்யும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.


தற்போது முக்கொம்பு மேல் அணையிலிருந்து காவிரி ஆற்றில் 31 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் 75 ஆயிரம் கன அடி நீரும் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.