என்ஜாய் மக்களே.. தமிழ்நாட்டில்.. வரும் 11ம் தேதி வரை மிதமான மழை நீடிக்குமாம்..!

Manjula Devi
Jul 06, 2024,05:34 PM IST

சென்னை:   தமிழ்நாட்டில் இன்று முதல் ஏழு நாட்கள் அதாவது ஜூன் 11ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பெரும்பாலான பகுதிகளில் வெப்ப சலனத்தால் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரத்தில் வெயில் வாட்டி எடுத்தாலும் இரவு நேரத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக கிண்டி, சைதாப்பேட்டை, தியாகராய நகர், நுங்கம்பாக்கம், எழும்பூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், வடபழனி, உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 




அதேபோல் காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம், கூவத்தூர், கல்பாக்கம் போன்ற பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை  பெய்தது. இது தவிர சீர்காழி, விழுப்புரம், மயிலாடுதுறை, உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இரவு நேரங்களில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் தற்போது வெக்கை தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேக வேறுபாடு காரணமாக ஜூன் 11ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய கூடும் எனவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக  சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.


இன்று மதியம் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்பு:


நீலகிரி, கோவை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், ஆகிய 8 மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கோடம்பாக்கத்தில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நம்பியூர், திருவள்ளூர், தேனாம்பேட்டை, சிவகங்கை, பனப்பாக்கம், வளசரவாக்கத்தில், தலா 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.