தமிழ்நாட்டில்.. இன்றும், நாளையும்.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு!

Manjula Devi
Aug 22, 2024,06:53 PM IST

சென்னை:   தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வட தமிழக கடற்கரைப் பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால்  பாசனத்திற்கு போதுமான தண்ணீர் கிடைத்ததால் விவசாயிகள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். 




கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவிகளில் தண்ணீர்  ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால்  நான்காவது நாளாக சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும் தடை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


அதேபோல் வரும் 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்