கவனம் மக்களே.. தமிழ்நாட்டில்.. இன்றும், நாளை மறுநாளும் கனமழை பெய்யும்.. எல்லோ அலர்ட்!

Manjula Devi
Jul 13, 2024,10:21 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளை மறுநாளும் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.


மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாகவும், பருவநிலை மாற்றத்தாலும் தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று கன மழை  வெளுத்து வாங்கியது. அதேபோல் சென்னை புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. 




வாகன ஓட்டிகள்  நீண்ட நேரமாக செல்ல முடியாமல் வாகன நெரிசலில் சிக்கித் தவித்தனர். விடிய விடிய பெய்த இந்த பலத்த மழையால் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 16 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. அதே போல் சென்னையில் தரையிறங்க வந்த 15 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக,வானில் வட்டமிட்டன.  தரையிறங்க முடியாமல் இருந்த நான்கு விமானங்கள்  பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.


இது தவிர டெல்டா மாவட்டங்களிலும் நேற்று பரவலாக கனமழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் குறுவை  சாகுபடி அமோகமாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியுற்ற நிலையில் மாலை நேரத்தில் பெய்த மழையால் தற்போது இதமான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


7 நாட்களுக்கு மழை:


இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று முதல் ஏழு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இது தவிர தமிழ்நாட்டில் இன்றும், நாளை மறுநாளும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 7 முதல் 11 சென்டிமீட்டர் வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இன்றும் நாளை மறுநாளும் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருவாலங்காடு 7 சென்டிமீட்டர், பொன்னேரி மற்றும் சோழவரத்தில் தலா ஆறு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், தாமரை பாக்கத்தில் தலா 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.