தமிழ்நாட்டில்.. இன்று இடி மின்னலுடன்.. மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!

Manjula Devi
Aug 28, 2024,10:44 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையில் பரவலாக லேசானது முதல் கனமழை வரை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வெக்கை சற்று தணிந்து இதமான சூழல் நிலவி வந்தது. இதற்கிடையே தற்போது பகலில் மீண்டும் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மழையின் அளவும் குறைந்து வருகிறது.இதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் வெப்ப சலனத்தால் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.




இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


11 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை


அதே சமயம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில்  மழைக்கு வாய்ப்புள்ளது .


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்