தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களை குறிவைத்த மழை ..22 ஆம் தேதி.. கனமழைக்கான மஞ்சள் அலர்ட்!

Manjula Devi
Jun 18, 2024,06:02 PM IST

சென்னை:   தமிழ்நாட்டில் வரும் 22ஆம் தேதி ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். இதனால் அந்த மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது தவிர தென்மேற்கு பருவமழையும் மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் தற்போது தமிழக முழுவதும் பரவலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 


பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.




5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்:


இந்த நிலையில் தமிழ்நாட்டில் வரும் 22 ஆம் தேதி  நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மற்றும் தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கன மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்போது ஐந்து முதல் 12 சென்டிமீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


18.6.24 முதல் 22.6.24 வரை:


மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் இடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீச கூடும். 


 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய  லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37- 38 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 -28 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக்கூடும்  எனவும் அறிவித்துள்ளது.