தமிழ்நாட்டில் இன்று முதல்.. ஆகஸ்ட் 12 வரை மழை நீடிக்கும்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Manjula Devi
Aug 07, 2024,12:12 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இன்று முதல் ஆகஸ்ட் 12 வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தமிழகத்தில் பரவலாக கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் தாம்பரம், ஜிஎஸ்டி சாலை, கிண்டி, பட்டினப்பாக்கம், அண்ணா சாலை, உள்ளிட்ட பல பகுதிகளில் மூன்றாவது நாளாக  நல்ல மழை பெய்தது. பிற்பகல் 3 மணிக்கு மேல் பிடித்த மழை சுமார் ஒரு மணி நேரமாக நீடித்தது. இதனால் தமிழ்நாடு முழுவதும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் நிலவி வருகிறது. 


நேற்று பெய்த கனமழை  காரணமாக தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சாலையில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.




இந்த நிலையில் தமிழாக கடலோரப் பகுதிகளில் நீடிக்கும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றியின் மேக வேறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழை இன்று முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இன்று கனமழை:


கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் மேகம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.