தமிழகத்தில் இன்று முதல்.. வரும் 26 ஆம் தேதி வரை.. இடி மின்னலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

Manjula Devi
Aug 21, 2024,02:33 PM IST

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 26 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளதால் தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. அதிலும் திண்டுக்கல், கன்னியாகுமரி, கோவை, மதுரை, தேனி, திருப்பூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்ததுள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். 


இருப்பினும் கடந்த சில நாட்களாக பகலில் வெட்கை சற்று அதிகமாக இருந்தாலும் தற்போது பெய்து வரும் தொடர் கனமழையால் இதமான சூழல் நிலவுவதுடன் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.




இதற்கிடையே வட தமிழக மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதனால் வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் நேற்று பரவலாக கன மழை கொட்டி தீர்த்தது.


இந்த நிலையில் இன்று முதல் வரும் 26 ஆம் தேதி வரை  தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இன்று கன மழை: 


கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய கூடும் எனவும் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்