கனமழை எதிரொலி.. மதுரையில்.. காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு!!

Su.tha Arivalagan
Nov 30, 2023,12:05 PM IST

- மஞ்சுளா தேவி


மதுரை: கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக மதுரையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, புயல் சின்னம் உருவாகியுள்ளதால், தமிழகத்தில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை நிரம்பியுள்ளதைத் தொடர்ந்து, மதுரையில் வைகை ஆற்றில் கரைகளைத் தொட்டபடி தண்ணீர் ஓடுகிறது. மேலும் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்வதால் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடிக் கொண்டிருக்கிறது.


மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் வருவதால், வண்டியூரில் உள்ள தெப்பக்குளமும் நிரம்பி சூப்பராக காட்சி தருகிறது. இதை வேடிக்கை பார்க்கவும் மக்கள் கூடுகிறார்கள். 




இந்நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக பலருக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. காய்ச்சலுக்காக தினமும் 70 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் 250 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் தினமும் ஏழு பேர் பாதிக்கப்படுவதாகவும்,இதுவரை 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


கனமழை பெய்து வருவதால் தண்ணீர் தேங்கும் இடங்களில் கொசுக்களும், வைரஸ்களும் அதிகமாக பரவும். இதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் எளிதாக பாதிக்கப்படுவார்கள். காய்ச்சல் வராமல் தடுக்க முன்கூட்டியே குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வெந்நீர், கசாயம் ,போன்றவற்றை பருகக் கொடுங்கள். மழை நீர் தேங்கும் இடங்களில் நீரை அப்புறப்படுத்துங்கள். இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் காய்ச்சல் பாதிப்பில் இருந்து விலக முடியும். காய்ச்சல் வராமல் தடுக்க விழிப்புணர்வுடன் செயல்படுங்கள் மக்களே..!!