தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்

Manjula Devi
Sep 04, 2024,09:08 PM IST

சென்னை:   வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் ஒன்பதாம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு  காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இரண்டாவது நாளாக தொடர்ந்து நேற்று மாலை சென்னையில்  வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் இரவில்  இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. 




குறிப்பாக நேற்று இரவு திருவான்மியூர், அடையார், மெரினா, பிராட்வே, மந்தவெளி, அமர்ந்தகரை, அண்ணா நகர், வில்லிவாக்கம், ஆவடி, அம்பத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. அதைப்போல் திருவொற்றியூர், ராணிப்பேட்டை, எண்ணூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், போன்ற சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. திடீரென பெய்த  இந்த மழையால் சாலை ஓர வியாபாரிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.


இதற்கிடையே ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 9 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது . அதேசமயம் மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் நாளை புதியதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்