மக்களே குடையோடு போங்க.. இன்று 2 மாவட்டங்களுக்கு மிக கனமழை.. 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!

Manjula Devi
Aug 19, 2024,06:20 PM IST

சென்னை:   தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்டங்களில்  மிக கனமழை பெய்ய  வாய்ப்புள்ளதாகவும், 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாகவே பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திண்டுக்கல், தேனியில் மாவட்டங்களில் நேற்று அநேக இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 


இது தவிர தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி விரைவில் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வங்கதேசம் மற்றும் மேற்குவங்கம் கடற்கரைப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற உள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் பெரும்பான பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால்  இதமான சூழ்நிலை நிலவி வருவதுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. 




நீலகிரி, கோவையில் மிக கன மழை


இந்த நிலையில் நீலகிரி மற்றும் கோவையில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்பதால் இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான  ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


அதேபோல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி, தென்காசி, ஆகிய ஒன்பது மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


நாளை கனமழை: 


நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்