தமிழ்நாட்டில்.. நாளை முதல் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு.. இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

Manjula Devi
May 31, 2024,10:52 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் நான்கு நாட்கள் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் கொளுத்தி எடுத்து வருகிறது. இது தவிர  வடகடலோர பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து வருவதால் அப்பகுதிகளில் வெப்ப அலை வீசியும் வருகிறது. இதனால் மக்கள் அயர்ச்சி அடைந்து வருகின்றனர்.




இதற்கிடையே தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. கேரளாவில் பெரும்பாலான பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் நேற்று தென்மேற்கு பருவ மழை துவங்கி உள்ளது. இதனால்  தமிழ்நாடு, காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் நான்கு நாட்கள் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தென்மேற்கு பருவமழை துவங்கியதால் கேரளாவில் இன்று முதல் ஐந்து நாட்கள் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் கர்நாடகாவில் நாளை முதல் நான்கு நாட்கள் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய  வாய்ப்புள்ளதாம்.


சென்னையில் வெயில் + மேகமூட்டம்:


சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 40-41 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20- 30 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக் கூடும் எனவும் அறிவித்துள்ளது. சென்னையில் நேற்றெல்லாம் நல்ல வெயிலும், புழுக்கமும் மக்களை வதைத்து விட்டது. தற்போதும் கூட வெயிலாகவே இருப்பதால் இன்றும் புழுக்கத்துடன்தான் இந்த நாள் முடியும் போல.