சொன்னபடி... அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி!

Aadmika
Apr 15, 2023,09:21 AM IST
டில்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது எம்.பி., பதவி பறிக்கப்பட்டதை அடுத்து 19 ஆண்டுகளாக தான் வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்துள்ளார்.

2019 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ராகுல் காந்தி, எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக லோக்சபா செயலகம் அறிவித்தது. இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் அடுத்த 8 ஆண்டுகளுக்கு ராகுல் காந்தியால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு ராகுல் காந்திக்கு, சூரத் கோர்ட் 30 நாட்கள் அனுமதி அளித்திருந்தது. ராகுல் காந்தியும் சமீபத்தில் சூரத் சென்று மேற்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். விரைவில் இந்த மனு விசாரைணக்கு வர உள்ளது. ஒருவேளை மேல்முறையீட்டு மனு மீதான விசாரைணயின் போது ராகுல் காந்தி சொல்லும் விளக்கத்தை கோர்ட் ஏற்கும் பட்சத்தில், ராகுல் காந்தியின் தகுதிநீக்கம் திரும்பப் பெறப்பட்டு, எம்.பி., பதவியும் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது.

சூரத் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும், டில்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வைப்பதற்கு ராகுல் காந்திக்கு வாய்ப்பு உள்ளது. மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளதால் ராகுல் மீது தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை துவக்க முடியாது.  இருந்தாலும் ராகுல் காந்தி 19 வருடங்களாக தான் வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்துள்ளார். தன்னை அம்மா சோனியா காந்தி வசிக்கும் அரசு பங்களாவிற்கு அவர் குடியேறி உள்ளார்.

முன்னதாக தனது வீட்டை ராகுல் காந்தி காலி செய்ய வேண்டும் என்று லோக்சபா வீட்டு வசதிப் பிரிவு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் மூலம் உத்தரவிட்டிருந்தது. அதை ஏற்றுக் கொண்ட ராகுல் காந்தி, குறித்த காலத்திற்குள் வீட்டைக் காலி செய்வேன் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். அதன்படிதற்போது அவர் தனது பங்களாவைக் காலி செய்து விட்டார்.