சுதந்திர தின விழா... ராகுல் காந்தி, சோனியா காந்தியும் புறக்கணிப்பு

Aadmika
Aug 15, 2023,12:40 PM IST

டெல்லி : டில்லியில் நடந்த சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடியின் உரையை புறக்கணிப்பதற்காக காங்கிரஸ் தலைவர்கள் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதனால் எதிர்க்கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் காலியாக இருந்தன.

நாட்டின் 77 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி, பாஜக ஆட்சியின் கடந்த கால சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். இதே போன்ற சாதனை பட்டியலுடன் அடுத்த ஆண்டு இதே நாள், இதே இடத்தில் திரும்ப வருவேன் என தனது உரையில் குறிப்பிட்டார். இது 140 கோடி இந்திய மக்களுக்கு மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளுக்கும் சேர்த்த இந்த தகவலை மோடி தெரிவித்துள்ளார்.



சமீபத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு தோல்வி அடைந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவையும் எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். அதே சமயம் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்தர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து மட்டும் தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சி தலைவர்கள் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளாததால் எதிர்க்கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் காலியாக இருந்தன. எதிர்கட்சிகள் சுதந்திர தின விழாவை புறக்கணித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரால் செங்கோட்டை பகுதியை நெருங்க முடியவில்லை. அதனால் தான் திரும்பி வந்து விட்டோம். கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்பதற்காக தான் திரும்பி வந்து விட்டோம் என காங்கிரஸ் தலைவர்கள் தரப்பில்  விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.